Thursday, July 23, 2009

காணாமல் போன வானொலியும் கண்டெடுத்த கவிக்குயிலும்!











’’இலங்கை ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன ஆசிய சேவையின் தமிழ் நிகழ்ச்சிகளை வழங்குவது எஸ்.பி. மயில்வாகனன்’’ என்று காதோரம் ஒலித்த அந்த தேன்மதுர தமிழோசைக் குரலை ஒரு காலத்தில் தீவிரமாகக் கேட்டு ரசித்தவன். பாடல்களைவிட அதைத் தொகுத்து வழங்கும் அறிவிப்பாளர்களின் குரல் மீது எனக்கு தீராத காதலே இருந்தது.
முகம் தெரியாத அந்த அன்பு அறிவிப்பாளர்களில் கே.எஸ்.ராஜா, ராஜேஸ்வரி சண்முகம், பி.எச்.அப்துல் ஹமீது, ராஜகுரு சேனாதிபதி கனகரத்னம் என்று இன்றைக்கும் பலரது மனங்களில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் அந்த குரலுக்குச் சொந்தக்காரர்கள் பற்றிய விபரங்களும் காலமாற்றத்தில் காணாமலே போய்விட்டது! இவர்களில் ஆறுதலாக இன்று நம்முன்னே வளைய வருபவர் பி.எச்.அப்துல்ஹமீது ஒருவர் மட்டும்தான்.
எனக்கும் என் மூத்த சகோதரிக்கும்தான் இவர்களின் குரல்களைக் கேட்பதில் மிகப்பெரும் போட்டியே நடக்கும். எங்கிருந்தோ பேசும் அவர்களின் அன்பான குரலையும் பாடல்களையும் காற்றலை மூலம் வீட்டுக்குள் இழுத்து வரும் எங்கள் வீட்டில் இருந்த அந்த கறுப்பு நிற பிலிப்ஸ் வானொலிப் பெட்டியும் இப்போது எங்கே போனது என்றே தெரியவில்லை.
அதன் பிறகு கைக்கு அடக்கமான டிரான்சிஸ்டர்கள் அறிமுகமான போது எனக்கே எனக்காக ஒரு குட்டிப்பெட்டியை வாங்கித் தரும்படி என் அப்பாவிடம் கேட்ட போது ’சும்மா இருடா, படிப்பு கெடும்’ என்று அப்போது வாங்கித் தர மறுத்துவிட்டார். பெருத்த ஏமாற்றம்.
என் வகுப்புத் தோழனான பக்கத்துத் தெரு மணிகண்டனின் அப்பா, அவனுக்கு ஒரு அழகான டிரான்சிஸ்டரை வாங்கிக் கொடுத்திருந்தார். அதைப் பார்க்கப் பார்க்க பொறாமையாக இருக்கும். அதை கையில் வைத்துக் கொண்டு பாடல்களை கேட்டு ரசிக்க வேண்டும் என்கிற தீராத ஆசையில் மணிகண்டனின் அப்பாவிடமே ஒரு பொய்யைச் சொன்னேன்.
‘’ இதே மாதிரி எனக்கும் ஒரு டிரான்சிஸ்டர் வாங்கித் தர எங்கப்பா சரின்னு சொல்லிட்டாரு. இத ஒரு பத்து நிமிஷம் எங்கப்பாகிட்ட காட்டிட்டு வந்துடவா? ‘’
அவரும் ‘பத்திரமா எடுத்துட்டுப் போயிட்டு கொண்டு வரணும்’ என்ற கண்டிஷனோடு என் கையில் அந்த பாட்டுக்குருவியை என்னிடம் கொடுத்தார். அப்போது மணிகண்டன் வீட்டில் இல்லை.
அப்பாதான் வாங்கித்தர மாட்டேன் என்கிறார், கிடைத்த இந்த ஓசி டிரான்சிஸ்டரில் ஆசைதீர, நடந்து கொண்டும்; படுத்துக் கொண்டும் பாடல்களை ரசிக்க வேண்டும் என்கிற தாகத்தோடு வேகவேகமாக வீட்டுக்கு நடக்கிறேன். அக்கா பார்த்துவிட்டால் என் ஆசை நிறைவேறாமல் போய்விடும். அதனால் அந்த குட்டிப் பெட்டியை மிகச் சாமர்த்தியமாக ஒளித்து மறைத்து வீட்டின் பின்பக்க வழியாக உள்ளே நுழைந்து மொட்டை மாடிக்கு வந்து விட்டேன்.
அங்கே தாத்தா இரவு நேரத்தில் படுத்துறங்கும் பாயில் ஹாயாக படுத்துக் கொண்டு அந்த அழகான டிரான்சிஸ்டரை மார்போடு அணைத்தபடி பாடல்களைக் கேட்க ஆரம்பித்தேன். இலங்கை வானொலியின் அந்த அன்பு அறிவிப்பாளர்களில் யாரோ ஒருவர் மிக நெருக்கமாக என்னோடு பேசிப்பேசி பாடல்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். நேரம் போவது தெரியாமல் அந்த இன்ப அனுபவத்தில் கண்களை மூடி திளைத்துக் கொண்டிருக்கிறேன்.
தடாரென என் பக்கத்தில் எதோ சத்தம் கேட்டு கண்ணைத் திறந்தால், மிக அருகில் இரண்டு கால்கள்.
அப்பா!
மிகவும் பாசமாகவும் அன்பாகவும் இருக்கும் என் அப்பா சில நேரங்களில் கோபம்கொண்டு என்னை கம்பெடுத்து அடிக்கவும் செய்திருக்கிறார். இப்போது அந்தக் கம்பு அவர் கையில்!
தொடையில், இடுப்பில் என அடுத்தடுத்து அடி! அடுத்த சில நொடிகளில் அந்த டிரான்சிஸ்டர் அவர் கையில்.
இன்னொரு கையோடு என்னைப் பிடித்தபடி மொட்டை மாடியிலிருந்து இறங்கி கீழே ஹாலுக்கு வருகிறார். அங்கே மணிகண்டன் கோபத்தோடு நின்று கொண்டிருக்கிறான். அவன் இல்லாத நேரம் பார்த்து அவன் அப்பாவிடம் பொய் சொல்லி அவனின் டிரான்சிஸ்டரை இரவல் வாங்கி வந்த விஷயத்தை என் அப்பாவிடம் போட்டுக் கொடுத்துவிட்டிருக்கிறான் என்பது அடுத்து நடந்த சம்பாஷணைகளில் எனக்குப் புரிந்த்து.
அவனிடம் அதை நீட்டியதும் அவன் பறந்து போனான். ’இப்படி அடுத்தவங்ககிட்ட இரவல் வாங்கிட்டுவந்து பாட்டுக் கேட்கணுமா? உனக்கே அசிங்கமா தெரியலை?’ என்று அம்மாவின் பாட்டு வேறு!
ஆனால் விழுந்த அடிகளுக்கு ஆறுதலாக அப்பா அடுத்த நாளே என்னைக் கடைக்குக் கூட்டிப்போய், மணிகண்டனின் டிரான்சிஸ்டரைவிட மிக அழகான ஒன்றை எனக்கே எனக்காக வாங்கிக் கொடுத்தார். அக்காவுக்கு அந்த பழைய பிலிப்ஸ் ரேடியோ முழு உரிமையாகிப் போனது. அவ்வப்போது என்னிடம் ‘ஓசி’ வாங்கி டிரான்சிஸ்டரிலும் பாட்டுக் கேட்பாள்.
இப்படி பல விழுப்புண்களை தாங்கிய சரித்திரம் கொண்டது எனது இசை ஆர்வம்!
பாடல்கள் மீது எனக்கு ஒரு ஆர்வத்தையும் ஈர்ப்பையும் ஏற்படுத்திய அந்த இலங்கைத் தமிழ் வானொலி காணாமலே போய்விட்டது. ஆனால் இவையனைத்திற்கும் ஆறுதல் பரிசாக அவ்வபோது சூரியன் எப்.எம்மில், நடுநிசி நேரங்களில் பழைய பாடல்களை ஒலிபரப்பி பரவசப்படுத்துபவர் யாழ்சுதாகர். அவரது கம்பீரமான குரலும், பாடல்களுக்கு அவர் கொடுக்கிற கவிதை அறிமுகமும், அந்தப் பாடல் எந்த ராகத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என்கிற விபரங்களும் மனசுக்கு இதமான ஒன்று! அவரது வலைப்பக்கத்தில் இலங்கை வானொலி பற்றியும் பல்வேறு பாடல்கள் சம்பந்தமான அரிய பல தகவல்களும் நிறைந்து கிடக்கிறது. இசைப்ரியர்களுக்கு அது ஒரு வரப்ரசாதம்தான்.
அதே போல ஒரு நாள் இணைய வானொலிகள் பற்றி அறிய, வலையை வீசிக் கொண்டிருந்ததில் ஜெர்மனியிலிருந்து ஒரு கவிக்குயிலின் குரல் என் காதுகளை குளிர வைத்தது. அதே இலங்கைத் தமிழ், பாடல்களை வழங்குவதற்குமுன் அவரது குட்டிக் குட்டிக் கவிதைகள் என அந்தக்குரல், என்னை இலங்கை தமிழ் வானொலியைக் கேட்டு ரசித்த பால்ய நாட்களுக்கே கொண்டுபோய் நிறுத்தியது. தினமும் கேட்டு ரசிக்க ஆரம்பித்தேன். இப்போதெல்லாம் எனது கணினியில் அந்தக் கவிதைக்குயிலின் குரல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது...காணாமல் போன இலங்கைத் தமிழ் வானொலியின் வாரிசாக இந்தக் கவிதைக்குயிலை நான் கண்டெடுத்ததாகவே கருதுகிறேன்.
'யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக' என்பதற்கேற்ப யாழ்சுதாகரின் வலைப்பக்கத்தின் இணைப்பையும், ஜெர்மனியிலிருந்து இயங்குகிற கவிதைக்குயில் திருமதி.ராகிணி அவர்களின் வலைப்பக்க இணைப்புகளையும் இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் கொள்கிறது என் இசைமனது....
கேட்டு ரசித்து கிறங்க, என் அன்பான அட்வான்ஸ் வாழ்த்துகள் நண்பர்களே!
-----------

8 comments:

அமிர்தவர்ஷினி அம்மா said...

கொஞ்சம் நெகிழ்ச்சிகளை உள்ளடக்கிய நல்ல மலரும் நினைவுகள் பதிவு சார்.

கானா பிரபா said...

அருமையான பதிவுக்கு நன்றி நண்பரே, இலங்கை வானொலி இணையத்திலும் இப்போது வருகின்றது.

Unknown said...

தங்கள் பதிவு காணாமல் போன என் பழைய நினைவுகளை கண்முன்னே நிறுத்தியது....
அருமை....

PPattian said...

டிரான்சிஸ்டர் வாங்கி கொடுத்த அப்பாவின் பாசம் நெகிழ வைத்தது. நல்லதொரு கொசுவர்த்தி..:)

Anonymous said...

நல்ல அருமையான பதிவு. உங்கள் மனதில் மட்டுமல்ல என்னைப் போன்ற அநேக நேயர்களின் மனதிலும் உள்ள ஆதங்கஙக்ளை வெளிகொணர்ந்து கொட்டி தீர்த்து விட்டீர்கள். ”காணாமல் போன வானொலியும் கண்டெடுத்த கவிக்குயிலும்” சரியான தலைப்பு கொஞ்சும் குரல் யாள்னியான திருமதி.ராகினி பாஸ்கரன் அவர்கள் என மனதிலும் நீங்காத இடம் பெற்றவர் எனது வானொலி ஆக்கங்களையும் உடனுக்குடன் பதிவு செய்து வானொலியில் ஒலிப்பரப்பி எனக்கு அனுப்பி வைத்தவர். இங்கே அவருக்கு மானசீகமாக நன்றி சொலவதில் பெருமையடைகிறேன். இந்த காலத்தில் பிரச்சினையே இல்லை ஆளுக்கு ஒன்று என்ன இரண்டு செலபேசியில் வானொலி கேட்டு மகிழ்கிறார்கள் இசைப்பிரியர்கள் சரியான் நேரத்தில் பதிவாக வழங்கியதற்க்கு நன்றி.

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

வணக்கம் நண்பரே,தங்களது பதிவுகள் நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இருப்பதால் மிகவும் சிறப்பாக இருக்கிறது.வானொலி இன்றும் மறக்க முடியாத ஒன்று.இந்தப் பதிவு படிப்பவர்களை எப்பொழுதும் மகிழ்விக்கும்.அனைத்துப் பதிவுகளுமே அருமை..இளையராஜா முதல் இசைப்புயல் வரை அருமை .தங்கள் பதிவுகள் வளரட்டும்.

தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

வணக்கம் நண்பரே,தங்களது பதிவுகள் நீங்கள் ஒரு பத்திரிகையாளராக இருப்பதால் மிகவும் சிறப்பாக இருக்கிறது.வானொலி இன்றும் மறக்க முடியாத ஒன்று.இந்தப் பதிவு படிப்பவர்களை எப்பொழுதும் மகிழ்விக்கும்.அனைத்துப் பதிவுகளுமே அருமை..இளையராஜா முதல் இசைப்புயல் வரை அருமை .தங்கள் பதிவுகள் வளரட்டும்.

Krishnamurthi Balaji said...

அற்புதமான பதிவு பொன்மாலைப்பொழுதுகளுக்கு மனதை அள்ளிச் சென்ற பதிவு ! எத்தனை முறை நினைத்தாலும் இனிக்கவே செய்கின்ற இலங்கை வானொலியின் இசை நினைவு! நினைவுகளைப் புதுப்பித்தமைக்கு மிக்க நன்றி !