Friday, June 25, 2010

விஜய்க்கு கதை சொன்ன கதை!



இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் திரைக்கதை விவாதக் குழுவில் பணியாற்றுகிறபோது, அப்போது தயாரிப்பில் இருக்கும் படத்தைத் தவிர்த்து அனைவரிடமும் வேறு எதாவது ஒரு கதை சொல்லச் சொல்லிக் கேட்பதை வழக்கமாக்கி இருந்தார். அப்படியொரு நாளில் என்னிடம் இருந்த ஒரு இரட்டை வேடக் கதையின் சுருக்கத்தை அவரிடம் சுமார் முப்பது நிமிடத்தில் சொல்லி முடித்தேன். ’லைன் வித்தியாசமா இருக்கே... முழு திரைக்கதையோடு நாளை உதவி இயக்குனர்களையும் வைத்துக் கொண்டு சொல்ல முடியுமா?’ என்று கேட்டார்.
அடுத்த நாள் இயக்குனர், அவரது முன்னாள் உதவி இயக்குனரும் இந்நாள் நகைச்சுவை நடிகருமான ரமேஷ் கிருஷ்ணா, மற்றும் சில உதவி இயக்குனர்கள் இருக்க அந்தக் கதையை ஒவ்வொரு சீனாக சுமார் இரண்டு மணி நேரம் சொல்லி முடித்தேன். கதையில் ஒருசில திருத்தஙகளைச் சொன்ன இயக்குனர் ’இது விஜய்க்கு சரியா இருக்கும். இன்னும் கொஞ்சம் டெலவப் பண்ணுங்க’ என்று சொல்லி விட்டார். அப்போது அவர் விஜயோடு இணைந்து ஒரு படம் பண்ணுவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த ப்ராஜெக்ட் தள்ளிப் போனது. அதனால் எனது அந்த இரட்டை வேடக் கதை அப்படியே ஃபைல் அளவிலேயே இருந்தது.
அதன்பின்னர் அழகிய தமிழ்மகன் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து அது வெற்றிகரமாக போகாததால் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதையே தவிர்த்து வந்தார். சமீபத்தில் விஜய்க்கு நெருக்கமான உதவி இயக்குனர் ஒருவரைச் சந்தித்தபோது எனது இரட்டை வேடக் கதையை அவரிடம் சொன்னேன். கேட்ட அவரோ மிகுந்த உற்சாகத்தோடு, ‘இது விஜய் சாருக்கு சூப்பரா இருக்கும். அவரையே கதை கேட்கச் சொல்றேன்’ என்று சொல்லிச் சென்றார். சொன்னபடியே விஜய் பிறந்த நாளான ஜூன் 22 அன்று விஜயைச் சந்தித்த அந்த உதவி இயக்குனர் என்னிடமுள்ள கதை பற்றி சொல்லி இருக்கிறார். இரண்டு நாளில் ஒரு அலைபேசி அழைப்பு.
‘’ விஜய் சார் வீட்டுலேர்ந்து ராஜேந்திரன் பேசுறேன். சார் உங்களை கதை சொல்றதுக்காக 25 வெள்ளி காலை பதினோரு மணிக்கு அவரோட நீலாங்கரை வீட்டுக்கு வரச் சொல்லி இருக்கார்’’
அதே நாள் அதே நேரத்திற்கு சற்று முன்னதாகவே ஆஜரானேன். ராஜேந்திரன் வரவேற்று அந்த பங்களாவிலேயே ஒட்டிக் கொண்டிருந்த இன்னொரு பகுதியான அலுவலக அறையில் அமர வைத்தார்.
விஜயோடு அவரது ரசிகர்கள் எடுத்துக் கொண்ட படங்களை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் விஜய் வீட்டில் அவர் ஜாக்கிஷானின் ரசிகராக அவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பெரிதாக சுவற்றில் மாட்டியிருந்ததைப் பார்த்தபோது ஒவ்வொரு நடிகனுக்குள்ளும் ஒரு ரசிகன் இருக்கிறான் என்பது தெரிந்தது. சரியாகப் பதினோரு மணிக்கு கேஷுவல் டிரஸில் உள்ளே வந்த விஜய் ’ஹலோ சார்’ என்று கைகுலுக்கி எதிரே அமர்ந்தார். என்னைப் பற்றி விசாரித்தார். நான் பணி புரிந்த படங்கள் பற்றியும் கே.எஸ்.ரவிகுமார் அவர்களின் திரைக்கதை விவாதங்களில் கலந்து கொண்டது குறித்தும் நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டு,
’இந்தக் கதைய ரவிகுமார் கேட்டிருக்காரா?’ என்று கேட்டார். நான் முன்னர் நடந்த விஷயத்தைச் சொல்லி அப்போது ஏனோ உங்களுடன் சந்திப்பு நிகழவில்லை என்பதைச் சொன்னேன்.
’நீங்க ரெடின்னா ஆரம்பிக்கலாம்’ என்று சொன்னவர், ‘என் wife உங்க கதைய கேட்கலாமா, if u don’t mind ‘ என்று கேட்டார். ‘தாராளமாக வரச் சொல்லுங்கள்’ என்றேன். உடனே தன் செல்போனில் மனைவியை அழைத்து ’வாம்மா’ என்றார். சற்று நேரத்தில் விஜய் துணைவி அங்கே வர அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். கூடவே அவர்களது வாரிசும்.
இடது புற ஷோபாவில் அவரது துணைவியும் மகனும் இருக்க மேஜையின் எதிர்புறத்தில் விஜய் இருக்க நான் கதை சொல்ல ஆரம்பித்தேன்.
அவரிடம் கதை சொல்ல அனுப்பிய அந்த உதவி இயக்குனர் ஏற்கனவே ஒரு விஷயத்தைச் சொல்லியிருந்தார்.
‘ விஜய் சார் கதை கேட்கும்போது அவரது முகத்தில் எந்தவித ரீயாக்‌ஷனும் இருக்காது. நகைச்சுவை காட்சிகளில்கூட சிரிக்க மாட்டார். அதுனால நீங்க அப்செட் ஆகிடாதீங்க.’
அப்படித்தான் இருந்தார். ஆனால் அவரது துணைவியார் முகத்தில் சில இடங்களில் ரீயாக்‌ஷன், சிரிப்பைக் காண முடிந்தது. அவரது மகன் முகத்திலோ ஒருசில நகைச்சுவை காட்சிகளைச் சொல்லும்போது (தன் அப்பாவையும் அம்மாவையும் பார்த்துக் கொண்டே) பாதி சிரிப்பை பார்க்க முடிந்தது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் இருபது நிமிஷங்களில் அந்த இரட்டை வேடக் கதையைச் சொல்லி முடித்தேன்.
’சரிம்மா நீங்க உள்ள இருங்க’ என்று அவர்களை உள்ளே அனுப்பி விட்டு என் பக்கம் திரும்பினார் விஜய்.
கதை பற்றிய கருத்துக்களைக்கூட உடனே வெளிப்படுத்த மாட்டார் என்றும் அந்த உதவி இயக்குனர் முன்னரே சொல்லியிருந்த்தால் நானும் அதை எதிர்பார்க்காமல் விடைபெறவா என்றேன்.
’ஓக்கே சார்.. நான் தொடர்பு கொள்கிறேன்’ என்றார்.
’இதே மாதிரி சிங்கிள் ஹீரோ கமர்ஷியல் சப்ஜெக்ட் ஒண்ணு இருக்கு. உங்களுக்கு சரியா இருக்கும். டைட்டில் அக்பர்’ என்றேன்.
’இன்னொரு நாள் அதையும் கேட்டுர்றேன்’ என்று வழியனுப்பி வைத்தார் விஜய்.
அவர் தரப்பிலிருந்து அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்....
சினிமாவில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். விஜயிடமிருந்து அழைப்பு வராமலும் போகலாம். இல்லை எனது அந்த இரட்டை வேடக் கதையில் விஜய் நடிக்கும் அறிவிப்பும் வரலாம்.
இரண்டையும் நிறைவோடு ஏற்றுக் கொள்வதுதான் நான்.
-----------