Thursday, February 26, 2009

ஏ.ஆர்.ரஹ்மானும் நானும்!




து ஒரு ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுது. எனது நண்பரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் மேனனிடமிருந்து போனில் ஒரு அழைப்பு. ‘நேரில் சந்திக்கலாமா?’


மாலை ஐந்து மணியளவில் எங்களது அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது நான் ‘இந்தியா டுடே’ தமிழ் பதிப்பில் உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன். சினிமா செய்திகளுக்கான பொறுப்பும் எனதே. அப்போது ராஜீவ்மேனன், படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதோடு விளம்பரப் படங்களுக்கே அதிகமாக பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரது விளம்பர ஜிங்கிள்ஸ்களுக்கு இசையமைக்கும் ஒரு இளைஞரைப் பற்றி சொன்னார். ‘’பெயர் திலீப். பிரமாதமான இசை ஞானம். நவீன இசைக்கருவிகளைக் கையாள்வதில் அவரிடம் மிகப்பெரிய திறமை ஒளிந்திருக்கிறது’’ இது மட்டுமல்ல. அவரது ஜிங்கிள்ஸ்களைக் கேட்டுவிட்டு மணி சார் அடுத்த படத்துக்கு அவரைத்தான் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தவுள்ளார் என்ற செய்தியையும் சொன்னார்.


அட! புதுச்செய்தியாக இருக்கிறதே என்று அந்த இளைஞனை ராஜீவ்மேனனே எடுத்த ஒரு புகைப்படத்தையும் வாங்கிக் கொண்டேன்.

அடுத்த நாள் காலை. அவர் கொடுத்த திலீப்பின் தொலைபேசி எண்ணுக்கு அழைக்கிறேன். எதிர்முனையில் திலீப். நான் என்னை அறிமுகம் செய்து கொண்டு நேரில் சந்திக்க வேண்டும் என்கிறேன். உடனே பரபரப்பான திலீப் அவசரமாக மறுக்கிறார்.

‘’இல்லை சார்... இப்ப எதுவும் பேட்டியெல்லாம் வேண்டாம். மணி சார் எதுவும் சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கார்...’’

‘’ படத்தைப் பற்றி நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். உங்களைப் பற்றி சொல்லுங்கள். மணிரத்னம் அறிமுகப்படுத்தும் இசையமைப்பாளர் பற்றிய தகவலை முதன்முதலில் இந்தியா டுடேவில் வரவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். ‘’ என்று சொன்னதோடு ராஜீவ்மேனனிடமிருந்து உங்களின் போட்டோவைக்கூட வாங்கிவிட்டேன் என்று சொன்னதும்தான் ஒருவழியாக சமாதானமடைந்து சந்திக்க ஒப்புக் கொண்டார்.

மாலை நான்கு மணிக்கு அவரது இல்லத்தில் அந்த முதல் சந்திப்பு நிகழ்ந்தது. பள்ளி மாணவனாகவும் இல்லாமல் கல்லூரி இளைஞனாகவும் இல்லாமல் நடுத்தரமான – கூச்சம் கலந்த சிரித்த முகம். அவருடன் அவரது தாயும் சகோதரியும். எனக்காகத் தெருமுனையில் இருக்கும் பேக்கரியில் வாங்கி வைத்திருந்த கேக்கும் மிக்ஸரையும் எனக்குக் கொடுத்து சாப்பிடச் சொன்னார், அவரது அம்மா. கூடவே காபியும் வந்தது.

பின்னர் நானும் திலீப்பும் பேச ஆரம்பித்தோம். அவரது அப்பா சேகர் பற்றி, அவரது மறைவுக்குப் பிறகு இசையே முழு நேரத் தொழிலானதுபற்றி, குடும்பப் பின்னணி, சமீபத்தில் இஸ்லாம் மதத்தில் மாறி தன் பெயரை அல்லா ரக்கா ரஹ்மான் ( அல்லாவின் ஆசீர்வாதம் பெற்ற ரஹ்மான் – அதுவே சுருக்கமாக ஏ.ஆர். ரஹ்மான் ) என்று மாற்றிக் கொண்டதைப் பற்றி – மணிரத்னம் படத்தில் கிடைத்த வாய்ப்பு ஆண்டவன் அருளியது என்றும் சொன்னவர், பல நாள் பழகிய நண்பரைப் போல என்னை அவரது ஒலிப்பதிவு கூடத்திற்குள் அழைத்துப் போய் இதுவரை பதிவாகியிருந்த இரண்டு பாடல்களை எனக்குப் போட்டுக் காட்டினார்.

அதில் ஒன்று சின்னச் சின்ன ஆசை. அதை எனக்காக மறுபடி ஒருமுறை ஒலிக்கச் செய்யுங்கள் என்றேன். நான் ஒன்ஸ்மோர் கேட்டதில் பெருமகிழ்ச்சியடைந்த ரஹ்மான் இரண்டாவது முறை மறுபடி அந்தப் பாடலை ஒலிக்க வைத்தார். ‘’இந்த ஒரு பாடலில் நீங்கள் புகழ்பெறப்போவது உறுதி’’ என்று பாராட்டியதோடு எனது வாழ்த்துக்களையும் தெரியப்படுத்தினேன். மணி சார் தவிர பட சம்பந்தமான கலைஞர்களே கூட இன்னும் இந்தப்பாடல்களைக் கேட்கவில்லை. உங்களுக்குத்தான் போட்டுக் காட்டியிருக்கிறேன். உங்களின் இந்தப் பாராட்டும் வாழ்த்தும் எனக்கு புதிய தெம்பைக் கொடுத்திருக்கிறது...’’ என்று நெகிழ்ச்சியானவர் தன் வீட்டு வாசல்வரை வந்து என்னை வழியனுப்பி வைத்தார்.

ஒருவாரம் ஓடிப்போயிற்று. ஒரு இரவு நேரம் வீட்டின் தொலைபேசி ஒலித்தது. எடுத்துப் பேசினால் எதிர்முனையில் ரஹ்மானின் அம்மா.

‘’தம்பி... உங்க பத்திரிக்கைல தம்பியோட போட்டோ எப்ப வருது தம்பி? ‘’

அந்தத் தாயின் குரலில் இருந்த ஆர்வத்தை என்னால் உணர முடிந்தது.

‘’இன்னும் இரண்டு நாளில் புத்தகம் வரும் அம்மா. கடைக்கு வருவதற்கு முன்னால் நானே உங்கள் வீட்டுக்கு வந்து தருகிறேன்’’ என்று சொன்னேன். அலுவலகத்திலிருந்து என் வீட்டிற்குச் செல்லும் வழியில்தான் அவர்கள் வீடு இருந்த காரணத்தால் புத்தகம் ரெடியானதும் ஐந்து காப்பிகளை எடுத்துக் கொண்டு அவர்கள் வீட்டுக்குப் போனேன்.

ஆளுக்கொரு புத்தகமாக, அவசர அவசரமாக அவரது அம்மாவும் சகோதரியும் ரஹ்மானின் போட்டோவுடன் கூடிய செய்தி இருந்த பக்கத்தைப் பார்த்துவிட்டு ஒருவருக்கொருவர் கலங்கிய கண்களுடன் தங்களின் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்ட அந்தக் காட்சி, இன்னமும் என் மனசில் ஒரு புகைப்படமாய் பதிந்து கிடக்கிறது. ஆனால், தன் புகைப்படம் முதன்முதலாக - அதிலும் இந்தியா டுடே என்கிற புகழ் பெற்ற பத்திரிக்கையில் வந்திருக்கிறதே என்கிற மகிழ்ச்சியைக்கூட மிக நிதானமாக ஏற்றுக் கொண்டார் ரஹ்மான். மெலிதான ஒரு புன்னகை. ‘’ ரொம்ப தேங்க்ஸ் சார்’’ என்று சுருக்கமாக தன் சந்தோஷத்தை வெளிககாட்டிக் கொண்டார் மிக அமைதியாக. அவரது அடக்கமான தன்மை அப்போதே அவருக்குள் குடிகொண்டிருக்கிறது.

ரோஜா வெளியானது. ஏ.ஆர். ரஹ்மானின் படமும் செய்தியும் வராத பத்திரிக்கைகளே இல்லை. அதன் பிறகு பத்திரிக்கையாளனாக அவருடன் சில சந்திப்புகள். அப்போதெல்லாம் மற்ற பத்திரிக்கையாளர்களே வியக்கிற வண்ணம் என்னிடம் தனிப்பட்ட முறையில் வந்து பேசிக் கொண்டிருப்பார். ‘’ என்னை முதன்முதலில் பேட்டி எடுத்தவராச்சே! பேசாம இருக்க முடியுமா?’’ என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது அனைவரின் முன்னிலையிலும் வெளிப்படையாகச் சொன்ன ரஹ்மானின் அந்த அன்பான நெருக்கத்தை இன்னமும் அவர் தொலைத்துவிடவில்லை என்பதுதான் அவரை இந்த உயரத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது.

அதன் பின்னர் எட்டு வருடங்கள் ஓடி விட்டன. நான் பத்திரிக்கைத் துறையிலிருந்து விலகி சினிமா, சின்னத்திரையில் பணிபுரிய ஆரம்பித்தேன். ஒரு தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக நண்பர் திரு.பாலகிருஷ்ணனோடு சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தயாரிக்க விரும்பினேன். அது: இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் சிறப்புப் பேட்டி!

அப்போது ரஹ்மான் இந்தி தமிழ் என்று இசையின் உச்சத்தில் இருந்தார். சந்திப்பதற்கே ஒரு வாரம் ஆனது. நானே அதைத் தயாரித்து வழங்கவிருப்பதால் ரஹ்மானை தனிப்பட்ட முறையில் சந்தித்து அதற்கொரு நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொண்டேன். எந்தவிதமான மறுப்பும் சொல்லாமல்,

‘‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தின் ரீரிக்கார்டிங் இரண்டு நாளில் முடிந்து விடும்; அதன்பிறகு எனது ரிக்கார்டிங் ஸ்டூடியோவிலேயே பேட்டியின் ஒளிப்பதிவை வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் ‘’ என்றார்.

அது என்ன ?

‘’ என்னை நீங்கள்தான் பேட்டி காணவேண்டும். வேறு தொகுப்பாளர்களை வைத்து எடுக்கக்கூடாது’’

ஒப்புக் கொண்டேன். அடுத்த சில நாட்களில் நண்பர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவில் சுமார் ஐந்து மணி நேரங்களை எங்களுக்காக ஒதுக்கியதோடு அனைவருக்கும் மதிய உணவுக்கு தன் வீட்டிலிருந்தே பிரியாணி ஏற்பாடு செய்திருந்தார் ரஹ்மான்.

சன் தொலைக்காட்சியில் 2004 ஏப்ரல் 14ம் தேதி ஒளிபரப்பான அந்தப் பேட்டியில் ரஹ்மான் தனக்கு மிகவும் பிடித்தமான தமிழ் பாடல்களை பட்டியலிட்டு சொல்லியிருந்தார்.

இளையராஜாவின் இசையில் ஜானி படத்தில் வரும் காற்றில் எந்தன் கீதம்...

எம்எஸ்வி இசையில் உன்னை ஒன்று கேட்பேன்...

கே.வி.மகாதேவன் இசையில் சங்கராபரணத்தில் தொரகுனா இதுவந்தி சேவா..

பி.பி.சீனிவாஸ் குரலில் காலங்களில் அவள் வசந்தம்....

இப்படி அந்தப் பாடல்கள் ஏன் என்னைக் கவர்ந்தன என்கிற ரஹ்மானின் விளக்கத்தோடு அந்தப் பேட்டி அமைந்திருந்தது. அதோடு அன்றைய தினம் அவரது இசையில் வெளியாகி இருந்த அலைபாயுதே படத்தின் பாடல் காட்சிகளை பேட்டியில் சேர்ந்துக் கொள்ள மணிரத்னம் அவர்களின் ஒப்புதலையும் வாங்கிக் கொடுத்திருந்தார்.

அதோடு விடவில்லை. அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான இரவு என்னை நேரில் வரவழைத்து ‘பேட்டி மிகச் சிறப்பாக வந்திருந்தது. தேங்க்ஸ்’’ என்றார். நான்தான் உங்களுக்குச் சொல்லவேண்டும் என்று அவருக்கு நான் நன்றி சொல்லிவந்த அந்த நடுநிசி இரவையும் என்னால் மறக்கமுடியாது..

இன்றைக்கு உலகில் இருக்கும் மீடியாக்கள் அனைத்தின் பார்வையும் இரண்டு ஆஸ்கார் பரிசுகளை வென்று வந்திருக்கும் ரஹ்மானின் மீது படிந்திருக்கிறது. இந்தப் பெருமைமிகு வேளையில் அவரை முதன் முதலில் பேட்டி கண்டவன் என்கிற பெருமை, மனசுக்குள் ஒரு நிறைவைத் தருவதோடு அவரைப் பற்றிய தகவல்களை ஆயிரக்கணக்கான அவரது ரசிகர்களோடும் எனது நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் அமைந்ததில் சந்தோஷம் கொள்வதென்னவோ நிஜம்!
-------

இதே பதிவை நண்பர் ஒருவர் வீடியோ காட்சிகளுடன் தன் வலைப்பக்கத்தில் மறுபதிவை அழகாக்கி இருக்கிறார். ஒரு விசிட் அடித்துப் பாருங்களேன்: http://balhanuman.wordpress.com/2010/06/29/%E0%AE%8F-