Thursday, March 5, 2015

பாண்டியில் ஒரு பண்பாளர்

அண்மையில் பாண்டிச்சேரிக்குப் போயிருந்தபோது நண்பர்கள் மூலம் அறிமுகமானார். மதன் என்கிற சாய்சூர்யா. இவரது தந்தை இளங்கோவன், நேர்மையான ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்து மறைந்தவர். அவரது நல்லெண்ணம், அடுத்தவர்க்கு உதவும் குணம், சேவை மனப்பான்மை அனைத்தையும் அவர் தனக்கு அளித்த சொத்தாகவே கருதி இந்த மைந்தன் சாய்சூர்யா ஒரு வழக்குரைஞராக பணியாற்றிக் கொண்டே பாண்டியில் தான் வசிக்கும் கோட்டைக்குப்பம் என்ற பகுதியில் பல்வேறு விதமான பொதுச் சேவைகளைச் செய்து அந்தப் பகுதி மக்களின் மனதில் பதிந்திருக்கிறார்.
இளைஞர்களால் எதையும் சாதிக்க முடியும் என்ற முடிவோடு பல இளைஞர்களை ஒன்று சேர்த்து ’சமூக சேவை விழிப்புணர்வுக் கழகம்’ என்ற அமைப்பை கடந்த 11. 11. 11 அன்று துவக்கிய சாய் சூர்யா அந்த அமைப்பு மூலம் பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கிறார். தொகுதிவாரியாக பல்வேறு தரப்பு இளைஞர்களை இனம்கண்டு அவர்களுக்கு தமது விழிப்புணர்வுக் கழகத்தின் பொறுப்பாளர் பதவியையும் கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தி, அந்தந்த பகுதியில் நலத்திட்டங்களை செயல்படுத்த மூலகாரணமாக இருந்து வருகிறார்.
பணமிருந்தால்தான் நற்காரியங்களைச் செய்ய முடியும் என்ற கண்ணோட்டத்தை தகர்த்து மணம் இருந்தால் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதைக் கொள்கையாகக் கொண்டு பல்வேறு இளைஞர்களுக்கு அவர்களின் கல்வித் தரம், திறமைகேற்ப வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதிலும் முனைப்பாக இருக்கிறார் இந்த சாய் சூர்யா.
சமீபத்தில் இவரது சேவை அமைப்பின் மூன்றாமாண்டு துவக்க விழாவில் பிரபல விஜய் டிவி சூப்பர் சிங்கர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது பெற்றோர், உட்பட பலரது உடல் உறுப்பு தான உறுதிப் பத்திரத்தை பாண்டி நியூ மெடிக்கல் சென்டர் இயக்குனர் டாக்டர் அர்ஜூன் அவர்களிடம் வழங்கி உறுப்பு தானம் குறித்த ஓர் விழிப்புணர்வையும் பாண்டியில் ஏற்படுத்தி இருக்கிறார். இதுபோன்ற பல்வேறு விதமான சேவைகள் பாண்டி மற்றும் தமிழகம் முழுக்க செயல்பட தனது அமைப்பு கடுமையாக உழைக்கும் என்கிற சாய் சூர்யாவின் வார்த்தைகளில் உண்மையும் உறுதியும் வெளிப்படுகிறது.
அவரது சேவைகள் சிறப்பாக தொடர வாழ்த்துவோம் வாருங்கள். நம்மைப் போன்றவர்களின் வாழ்த்துகள்தான் இதுமாதிரி சேவை மனப்பான்மை கொண்டவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரும் என்பதில் சந்தேகமில்லை.
அவரோடு இணையவும், வாழ்த்தவும் தொடர்புக்கு: 9094955447.
இமெயில்: join_ssvk@yahoo.com

Wednesday, October 31, 2012

ராஜா ராஜாதான் - 2



ராஜா சாரின் பாடல்கள் உலகம் முழுக்க கோடிக்கணக்கான இதயங்களில் பதிந்து போயிருப்பதில் ஆச்சர்யமில்லை. அதே போல அவரது பின்னணி இசைக்கும் மாபெரும் மகத்துவம் இருக்கிறது. பலபேர் அதை அவ்வளவு உன்னிப்பாக ரசித்திருக்க மாட்டார்கள். அல்லது அதற்கான சூழ்நிலை அமையாமல் இருந்திருக்கலாம். அவரது சில படங்களின் பின்னணி இசையின் போது ஒரு உதவி இயக்குனராக அருகிலிருந்து பார்த்துப் பார்த்து ரசித்தவன் என்கிற முறையில் அந்த அனுபவங்களை இங்கே உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பரவசம் கொள்கிறேன்.

நூறாவது நாள் படப்பிடிப்பு மொத்தமே 18 நாட்கள்தான் நடந்தது. டப்பிங், டபுள் பாசிட்டிவ் எல்லாம் ரெடி. ராஜா சாரின் பின்னணி இசை நாளுக்காக எல்லோரும் காத்திருக்கிறோம். ஆனால் யாரும் எதிர்பாராதவண்ணம் அவருக்கு வயிற்றில் எதோ சிறு பிரச்னை காரணமாக விஜயா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைக்கிறது. காரணம் ரிலீஸ் தேதி குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தார் தயாரிப்பாளர். வித்தியாச படமென்று தனக்கு பெயர் வரும் என்று காத்திருக்கிறார் இயக்குனர் மணிவண்ணன். ஒரு குழப்பம் நிலவுகிறது.

அதே குழப்பத்தோடு அடுத்த நாள் ஆஸ்பத்திரியில் போய் அவரை சந்திக்கிறோம் நானும் இயக்குனரும். ’’நல்லா ரெஸ்ட் எடுக்கச் சொல்லியிருக்காங்க. டிஸ்சார்ஜ் ஆக ஒரு வாரமாவது ஆகும். அதுனால உன் படத்துக்கு அமரை (கங்கை அமரன்) வைச்சு ரீ-ரீக்கார்டிங்கை முடிச்சுக்க’’ என்கிறார் ராஜா. இயக்குனர் முகத்தில் கவலை ரேகை. அதில் அவருக்கு உடன்பாடில்லை என்பதை அவரது முகம் காட்டிக் கொடுத்தது.

’’என்னய்யா யோசிக்கிற?’’ இது ராஜா

’’இல்ல. உங்க ரீ-ரீக்கார்டிங்காகவே சில இடங்களை ஷூட் பண்ணியிருக்கேன். நீங்க பண்ணா அந்தப் படத்தோட ரேஞ்சே வேற மாதிரி இருக்கும்... ஆனா படத்தோட ரிலீஸ் தேதி வேற ஃபிக்ஸ் ஆகிடுச்சு. அதான் ஒரே குழப்பமா இருக்கு.....’’ –இது மணிவண்ணன்

’’சரிய்யா ஒண்ணு பண்ணு. அதை வீடியோல காப்பி பண்ணிட்டு வா. இங்க ஒரு டிவி டெக் ஏற்பாடு பண்ணு. நான் படத்தை அதுல பாத்துட்டு நோட்ஸ் மட்டும் எழுதிக் கொடுக்கிறேன். அதை வச்சு அமர் ரீ-ரீக்கார்டிங்கை முடிச்சிடுவான்...’’ என்கிறார் ராஜா.

இயக்குனர் முகத்தில் அப்படியொரு வெளிச்சம். அவருடைய ரீ-ரீக்கார்டிங் இல்லாமல் படம் தொய்ந்து போகும் என்ற வருத்தமுடன் வந்தவருக்கு ராஜா விருந்து வைத்தே அனுப்பி விட்டதாக நான் உணர்ந்தேன்.

அடுத்த நாள் அவசர அவசரமாக முழுப்படமும் ஒரு வீடியோ கேஸட்டில் பதிவு செய்யப்படுகிறது. அப்போதெல்லாம் டிவிடி, சிடி, பென் டிரைவ் எல்லாம் கிடையாது. ஆஸ்பத்திரியில் ராஜா சாரின் அறையில் ஒரு டிவியும் வீடியோ டெக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. சற்றே சோர்வாக இருந்தாலும் ராஜா சார் ஸ்டூடியோவில் இருக்கிற அதே சிரத்தையோடு முழுப்படத்தையும் பார்க்கிறார். படம் முடிந்ததும், மெல்ல சிரித்தபடியே,

‘’நல்லா பண்ணியிருக்கியா... நாளைக்கு வந்து நோட்ஸ் வாங்கிட்டுப் போ’’ என்று வழியனுப்பி வைக்கிறார்.

ராஜா சார் எழுதிய நோட்ஸ்களை அவரது இசைக் குழுவினர் வாசிக்கிறார்கள்- கங்கை அமரன் மேற்பார்வையில். அந்த இரண்டு நாட்களும் ராஜா சார்தான் அங்கே இல்லையே தவிர அவரது இசைக் கோடுகள், திரையில் பரபரவென படத்தின் பின்னணி இசையாக பதிவாகிக் கொண்டே இருக்கின்றன. பின்னணி இசையில்லாமல் தொழில் நிமித்தம் பலமுறை அந்தப் படத்தைப் பார்த்த எனக்கு, ஒவ்வொரு ரீலையும் ராஜா சாரின் பின்னணி இசையோடு பார்க்கிறபோது பிரமிப்பின் உச்சிக்கே போய் வந்தேன்.

படம் வெளியாகி ரசிகர்களின் பாராட்டுதல்களோடு நூறு நாளையும் தாண்டி ஓடியது. அந்தப் படத்தின் வெற்றியை முன்கூட்டியே உணர்ந்ததால்தான்தான் ஆஸ்பத்திரியில் இருந்தாலும் அங்கிருந்தே நோட்ஸ் எழுதிக் கொடுக்க அவருக்கு தோன்றி இருக்கிறது. நடிகர்கள், இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள் உட்பட ஒரு படத்தின் அனைத்து கலைஞர்களுக்கும் ஐம்பது மார்க் என்றால், ராஜா சார் ஒருவர் மட்டுமே தனி ஆளாக மீதி ஐம்பது மார்க்கை பகிர்ந்து கொண்ட படங்கள் அநேகம்.

இதைப் போல இன்னும் சில படங்களின் பின்னணி இசைக் கோர்ப்பிலும் நான் இருந்திருக்கிறேன். ராஜா சார் முதல் நாள் படத்தைப் பார்ப்பார். அடுத்த நாள் அவரது சென்டிமெண்ட்டாக ஐந்தாவது ரீலுக்கு பின்னணி இசையை ஆரம்பிப்பார். ஒரு நாளைக்கு நான்கு ரீல் வரை அது தொடரும். மூன்றாவது நாள் முழுப்படமும் ரெடியாகிவிடும்.

திரையில் எந்தவித இசையும் இல்லாமல் ஒரு நாடகம் போல இருக்கும் காட்சிகள், அவரது இசையில் ஒவ்வொரு ரீலாக உயிர் பெறும் அதிசயம், அந்தக் கலைக்கூடத்தில் நிகழும். சம்பந்தப்பட்ட இயக்குனர்களே மிக ஆனந்தமாக ராஜா சாரின் பின்னணி இசை நிகழ்வை ஒருவித பெருமிதத்தோடும் பிரமிப்போடும் நிறைவான முகபாவங்களோடு ரசிப்பதை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.

இப்படி எத்தனையோ ஹிட் படங்களின் இசைக் கோர்ப்பை உடனிருந்து பார்த்து ரசித்த நான், அந்த இசை மேதையோடு பணிபுரிந்த சில படங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்….

கோபுரங்கள் சாய்வதில்லை, நூறாவது நாள், இளமைக் காலங்கள், உதய கீதம், உன்னை நான் சந்தித்தேன், நினைவே ஒரு சங்கீதம், கீதாஞ்சலி, இங்கேயும் ஒரு கங்கை, மனிதனின் மறுபக்கம், உனக்காகவே வாழ்கிறேன்……

ராஜாவைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். சொல்லிக் கொண்டே இருப்பேன்…


>

Thursday, August 16, 2012

மரங்களே என் மகன்கள்....

சத்தியமங்கலம் என்றதும் உங்களுக்குச் சட்டென நினைவுக்கு வருவது சந்தன மரக் கடத்தல் புகழ் வீரப்பனாகத்தான் இருக்கும். இனிமேல் அந்த பிம்பத்தைத் தயவுசெய்து அழித்துவிடுங்கள். இனி சத்தியமங்கலம் என்றதும் யாருக்கும் நினைவுக்கு வரப்போவது, இந்த அய்யாசாமியாகத்தான் இருக்கும். உலகம் முழுக்க அந்த ஊருக்கு ஏற்பட்டிருக்கும் களங்கத்தைத் துடைக்கிற காரியமொன்றை, இந்த மனுஷர் சத்தமில்லாமல் செய்திருக்கிறார் என்பதுதான், ‘மரங்களின் மகாத்மா’ விருதைப் பெற்றிருக்கும் இந்த அய்யாசாமியின் சாதனை!

சத்தியமங்கலத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வேட்டுவன்புதூர் கிராமம். மொத்தம் 250 வீடுகள். அதன் மக்கள் தொகையோ ஆயிரம் மட்டுமே. ஆனால், அதில் ‘ஆயிரத்தில் ஒருவரான’ அய்யாசாமிக்கு வயது 76. ஆனாலும் மனதளவில் இளைஞராகவே இருக்கிறார்.

அப்படி என்ன இவர் பெரிதாகச் சாதித்து விட்டார்?

அவர் சாதனையைப் பார்ப்பதற்கு முன்னால் அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பைப் பார்த்து விடுவோமா?

தன் ஐம்பத்தோரு வயது வரையிலும் அய்யாசாமிக்கு, ‘பள்ளிக்கூடம்’ என்கிற ஒற்றை வார்த்தையைக்கூட எழுதவோ படிக்கவோ தெரியாது. பார்த்து வந்த தொழில் ஆடுமேய்ப்பதுதான். ஒருகாலத்தில் சொந்தமாக நாற்பது ஆடுகள் அவரிடம் இருந்தன. பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நடந்த அவரது மகளின் திருமணச் செலவுகளுக்காக அவை அனைத்தையுமே விற்க வேண்டிய சூழ்நிலை. இப்போது அய்யாசாமி ஒரு விவசாயக்கூலி. பகலில் சூரியனும் இரவில் மண்ணெண்ணை விளக்கும் மட்டுமே, வெளிச்சம் தரும் ஒரே ஒரு சின்னக் குடிசை வீடுதான் இப்போதைக்கு மிச்சம். மிகச் சமீபத்தில்தான், மழைத்தொல்லை காரணமாக, சுமார் 100 ஓடுகளைக் கொண்ட ஓட்டுவீடாக அது உருமாறியிருக்கிறது. கூடவே அவரது துணைவியான 65 வயது கருப்பாத்தா.
பத்துவரிப் பாராவில் முடிந்து போகிறது அய்யாசாமியின் பயோடேட்டா. ஆனால் அவரது சக்திமிக்க சாதனை, நாளைய சரித்திரத்தில் இடம்பெறப் போவது உறுதி. அதற்கு முன்னே, அவரது ஃப்ளாஷ்பேக் சம்பவம் ஒன்றை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்ப்போமா?
அது 1984ம் வருடம்.

அப்போது அய்யாசாமிக்கு ஐம்பத்தோரு வயது. படிக்கத் தெரியாது என்றாலும், டீக்கடைக்குப் போய் அன்றைய நாளிதழை அடுத்தவர்களைவிட்டு வாசிக்க வைத்து, நாட்டு நடப்பைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்திருக்கிறார். ‘ஆடுமேய்க்கிற ஆள்தானே’ என்று அந்தப் ‘பெருசை’ யாரும் அலட்சியம் செய்யாமல், அந்த ஊர் இளைஞர்கள் அவருக்குச் செய்திகளை வாசித்துக் காட்டியது மட்டுமில்லாமல், மெல்ல மெல்ல அவருக்குப் படிக்கவும் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். நாளடைவில், பேப்பரில் வரும் செய்திகளை எழுத்துக் கூட்டிப் படித்துப் புரிந்து கொள்கிற அளவுக்குத் தேறிவிட்டார்.
இரவு நேரங்களில் பக்கத்து வீட்டு நெசவுத் தொழிலாளியான ரங்கசாமியின் ரேடியோவில், கோவை வானொலி ஒலிபரப்புகிற செய்தி மற்றும் நிகழ்ச்சிகளைக் கேட்பது வாடிக்கை. செய்தி கேட்காமல் தூங்கப் போனதே இல்லை. அப்படியொருநாள் அவர் கேட்ட நிகழ்ச்சிதான், அவர் மனதில் ஒரு உறுதிமொழியை ஏற்றுக் கொள்ள வைத்திருக்கிறது.

“நமது நாட்டில் நீர்வளம் மிகவும் குறைந்து கொண்டே போகிறது. மழை பொய்த்துப் போக ஆரம்பித்திருக்கிறது. இனிமேல் விவசாயம் என்பதும், பயிர் அறுவடை என்பதும் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை. பூமி, நாளுக்கு நாள் சூடாகிக் கொண்டே போவதால், மரங்கள் அதிகமான அளவில் தேவைப்படுகின்றன. அவைகளால்தான் நமக்கு மழை பெய்யும் வாய்ப்பு அதிகம். ஆகவே நாம் அனைவரும் ஒரு இந்தியராக நமது நாட்டை எதிர்காலத்தில் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எனவே ஆளுக்கு ஒரு மரமாவது வளர்ப்பதை நம் கடமைகளில் ஒன்று என்பதை உறுதிமொழியாக ஏற்றுக் கொள்வோம்” என்பதே அந்த நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட உரை. (சுமார் 25 வருடங்களுக்குமுன், அந்த வானொலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவரின் பெயர் முருகானந்தம் என்பதைக்கூட அய்யாசாமி இந்த வயதிலும் நினைவுகூர்கிறார்!)

அந்த நிமிடமே தன் மனதிற்குள் மரம் வளர்க்கும் உறுதிமொழியை ஏற்றுக் கொண்ட அய்யாசாமி, அடுத்த நாள் காலையில் செய்த முதல் விஷயம், கிராமத்தைச் சுற்றியிருக்கும் வேப்பமரங்களின் கீழ் சிதறிக் கிடக்கும் அதன் விதைகளையும் சேகரித்து, ஊருக்கு ஒதுக்குப்புறமான - இவர் ஆடுமேய்க்கும் இடமான - காட்டோடையில் ஆரம்பித்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் மாதேஸ்வரன் மலை அடிவாரம் வரை, இருமருங்கிலும் தக்க இடைவெளிவிட்டு விதைத்திருக்கிறார். நாளடைவில், அந்தப் புறம்போக்கு நிலத்தில் இவர் விதைத்தவைகளில் செடியாக வளர்ந்து நின்றவைகளின் எண்ணிக்கை மட்டும் மூவாயிரத்தைத் தொட்டிருக்கிறது!

அவைகளுக்குப் பொறுமையாக முள்வேலியிட்டு ஆடு, மாடுகள் மேய்ந்து விடாதபடி மிகக் கவனமாகப் பாதுகாத்து வளர்த்திருக்கிறார் அய்யாசாமி. தான் வளர்க்கும் ஆடுகளின் எச்சங்களையே சேகரித்து, அந்தச் செடிகளுக்கு உரமாகவும் இட்டு வந்திருக்கிறார். கண்முன்னே அவைகள் மளமளவென்று வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த அய்யாசாமிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. சில வருடங்களில் அந்தச் செடிகள் மரங்களாக மாறியிருக்கின்றன. தனக்கு ஒரு ஆண்குழந்தை இல்லையே என்கிற வருத்தம் நீண்ட நாள் அய்யாசாமியின் மனதை உறுத்திக் கொண்டேயிருந்திருக்கிறது. ஒருகட்டத்தில் அதைப் பற்றி கவலை கொள்ளாமல், தான் விதையிட்டு உரமிட்டு வளர்த்த மரங்களையே தனது மகன்களாகப் பாவித்து, மேலும் கவனமாக அவைகளைப் பராமரித்திருக்கிறார்.
இன்று அத்தனை மரங்களும் ஓங்கி உயர்ந்து வளர்ந்து, அந்த வேட்டுவன் புதூரையே ஒரு பசுஞ்சோலையாக மாற்றி அமைத்திருக்கும் அதிசயம் நிகழ்ந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கின்றன அந்த மரங்கள்.

“இந்த உலகத்துல ஒரு அப்பனுக்கு ஆம்பளப் புள்ளைங்க ஒண்ணுலேர்ந்து பத்துப் பேரு இருப்பாங்க, இல்லீங்களா தம்பீ? ஆனா மூவாயிரம் ஆம்புளப் புள்ளைங்க எனக்குச் சொந்த மகன்களா, எங்கண்ணு முன்னாடி கம்பீரமா வளர்ந்து நிக்கிறானுங்க.... இதவிட எனக்கு வேற சொத்து சொகம் எதுவும் வேணாஞ்சாமி..... இது ஒண்ணே எனக்குப் போதுங்கண்ணு... “ என்று கோவைத் தமிழில் பேசி நம்மை நெகிழ வைக்கிறார் அய்யாசாமி!
உண்மைதான். இந்த அப்பாவி அய்யாசாமியின் இன்றைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

அவர் குடியிருக்கும் ஓட்டு வீடு; ஈரோடு ஜூனியர் சேம்பியன் என்ற அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றில் எம்.எஸ்.உதயமூர்த்தியால் வழங்கப்பட்ட ‘மரங்களின் மகாத்மா’ என்கிற பட்டத்தோடு கூடிய ஒரு ஷீல்டு; ஈரோடு சித்தார்த்தா மெட்ரிக் பள்ளியிலிருந்து கொடுத்த கண்ணாடி பிரேமிட்ட ஒரு வாழ்த்து மடல். இவரது செய்தி ஆர்வத்திற்குப் பரிசாக, குழந்தைசாமி என்கிற உள்ளூர் நண்பரால் வழங்கப்பட்ட ஒரு சிறிய டிரான்சிஸ்டர். கூடவே சில நிகழ்ச்சிகளில் அவருக்குப் போர்த்தப்பட்ட எட்டு சால்வைகள். அந்தச் சால்வைகளைப் பற்றி, அய்யாசாமி மிகவும் விட்டேத்தியாகச் சொல்கிறார்,
“அந்தப் பட்டுத் துணிங்கதான் எனக்கும் எம்பொஞ்சாதிக்கும் குளிர்காலத்தில போத்திக்க ஒபயோகமா இருக்குதுங்க தம்பி...”

காந்தியின் நினைவாக தன் வாழ்நாளில் சட்டையே அணியாத அய்யாசாமியின் ஒரே வருத்தம் என்ன தெரியுமா? இரண்டு வருடங்களுக்கு முன் அவர் வெளியூர் போயிருந்தபோது, சில சமூக விரோதிகள், அவர் மகன்களாக கருதி வளர்த்த சில மரங்களை இரவோடு இரவாக, வேரோடு வெட்டி எடுத்துச் சென்றதுதான். ஊருக்குத் திரும்பிய அவர் துடித்துப் போய் ஈரோடு கலெக்டரிடம் ஓடோடிப் போய் புகார் மனு அளித்திருக்கிறார். ஆனால் அதற்கு எந்தவித நடவடிக்கையும் இதுவரை இல்லையென ஆதங்கப்படும் அய்யாசாமி, அந்த புகார் மனுவிற்கான ரசீதைப் பத்திரமாக வைத்திருந்து நம்மிடமும் ஆதங்கமாகக் காட்டுகிறார். ஆனாலும் தனக்குத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவராக,
“ஆயிரம் சந்தன மரங்களை வெட்டிச் சாய்ச்ச வீரப்பனைதான் இந்தப் பேப்பர்காரங்க மாய்ஞ்சு மாய்ஞ்சு எழுதுனாங்க, டி.வி. பொட்டிக்காரங்களும் கதை கதையா சொல்லிப் படமா எடுத்துக் காட்டுனாங்க. இதுல நம்ம சொல்றது எப்படிங்க சாமி எடுபடும்?”

ஒரு பசுமைப் புரட்சியையே நிகழ்த்தியிருக்கும் அய்யாசாமியின் இந்த ஆதங்கமிக்கக் கேள்வியில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.. அவரது மனைவியிடமும் பக்கத்து வீட்டுக்காரரிடமும் இவர் தன் கடைசி ஆசையாக, ‘நான் இறந்துவிட்டால் சுடுகாட்டில் புதைத்துவிடக் கூடாது. என் மூவாயிரம் மகன்களுக்கு நடுவே ஒரு இடத்தில் குழிதோண்டித்தான் புதைக்க வேண்டும்’ என்பதுதானாம்.

சமீபகாலமாக, அய்யாசாமியை வறுமை வலுவிழந்தவராக ஆக்கிக் கொண்டிருக்கிறது. மாதாமாதம் வந்து கொண்டிருந்த முதியோர் உதவித்தொகையான நானூறு ரூபாய்கூட, கடந்த ஐந்து மாதங்களாக வரவில்லையாம். அதற்கு மணியகாரரிடமும், தாசில்தாரிடமும் தினசரி நடந்து கொண்டிருப்பதாக வேதனையோடு சொல்லும் அய்யாசாமி, அந்தக் கஷ்ட ஜீவனத்திலும் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னர், கோவை வானொலி மூலம், தான் எடுத்துக் கொண்ட உறுதிமொழி வாசகங்களை இன்னமும் நினைவில் வைத்துக் கொண்டு, நம் அனைவரிடமும் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார்:

“எதோ என்னால முடிஞ்சது, எப்படியோ கஷ்டப்பட்டு மூவாயிரம் மரங்கள தனி ஆளா வளர்த்துட்டேன். ஆனா நீங்க எல்லாரும், இந்த நாட்டுல எதாவது ஒரு இடத்துலயாவது ஒரே ஒரு மரம் வளர்ப்போம்னு உறுதிமொழி எடுத்துக்குவீங்களா?”

அய்யாசாமியின் இந்த ‘ஒரே ஒரு’ கேள்விக்கு நம்மில் எத்தனை பேரிடம் ‘ஆம்’ என்கிற பதில் இருக்கிறது?



Friday, June 22, 2012

இந்திய சினிமாவுக்கு வயசு நூறு.

இது குறித்து இந்தியாவில் சினிமாவின் பயணம் குறித்து, ஏழாவது மனிதன் படத்தின் இயக்குனரும் தற்போது பிரசாத் திரைப்படக் கல்லூரியின் முதல்வருமான ஹரிஹரன் அவர்கள் புதிய தலைமுறைக்காக எனக்கு அளித்த பேட்டி இது. அவரது வெளிப்படையான துணிச்சலான பல கருத்துக்களுக்காக இதை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.








அரசாங்கத்திற்கு சினிமா மீது காழ்ப்புணர்ச்சி


-கே.ஹரிஹரன்


ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் சினிமா வருவதற்கு முன்னரே கார், விமானம், வானுயர்ந்த கட்டிடங்கள், டிராஃபிக் ஜாம், மின்சார விளக்குகளால் ஜொலிக்கும் நகரங்கள், ஆட்டோமேடிக் எலிவேட்டர்ஸ், ஏன் கொக்கோகோலா கூட அங்கே வந்தாயிற்று. ஆனால் இந்தியாவிற்குள் சினிமா வரும்போது மின்சாரமே கிடையாது. பங்களாக்கள், கார்கள், விமானம் போன்ற அதிநவீன கண்டுபிடிப்புகள் எல்லாவற்றையும் சினிமாதான் முதன்முதலில் நம் மக்களுக்கு அறிமுகப்படுத்தியது. புதுமை என்கிற விஷயத்தையே சினிமா மூலம்தான் நாம் அறிந்து கொண்டோம். அதன்பிறகுதான் அதில் காட்டப்பட்ட அனைத்தையும் ஒவ்வொன்றாக நேரில் பார்த்தோம்.


இந்தியாவைப் பொருத்தவரை ஸ்கூல், காலேஜ், யுனிவர்சிட்டி போன்றவைகள் சொல்லித்தர முடியாத பல விஷயங்களை அவைகளுக்கு முன்பாகவே சினிமாதான் நமக்குக் கற்றுக் கொடுத்தது. அப்போது இங்கே ஒரு கிராமத்தில் இருப்பவனுக்கு பியானோ, சாக்ஸபோன் போன்ற இசைக்கருவிகளைப் பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் படங்களில் ராஜ்கபூரும், சிவாஜி கணேசனும் அதை அருமையாக வாசிப்பார்கள். இப்படியெல்லாம் வாத்திய கருவிகள் இருக்கின்றன என்பதை அப்போதே சினிமாதான் சொல்லி பிரமிப்பூட்டியது. முதலாளித்துவத்தை இங்கே சினிமாதான் முதன் முதலில் அறிமுகப்படுத்தியது. பலவிதமான பொருட்களின் நுகர்வுமயத்தையும் அதுதான் நமக்கு உணர்த்தியது. உணவு, உடை, பாடல் என்று பல துறைகளிலும் புதுப்புது விஷயங்களை சினிமாதான் இந்தியாவிற்கே காட்சிப்படுத்தியது.


இருபதாம் நூற்றாண்டின் கவிதை என்பது சினிமா பாடல்கள்தானே? வேறு எது இங்கே கவிதை என்று அறியப்பட்டது? பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்படாத கவிதைகளை சினிமாவில் நாம் கேட்டோம். பாடங்களில் புராணங்களை படித்து மனப்பாடம் செய்ய முடியாத பல விஷயங்களை இந்தச் சினிமாதான் மிகச் சுலபமாக நம் மனதில் பதிய வைத்தது. புராணங்களைத் தாண்டி சரித்திரம் மற்றும் சமூகப் படங்களின் தயாரிப்பில் இந்திய சினிமா பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டிய பல சாதனைகளைப் படைத்திருக்கிறது.
அதே புராணங்களில் இருந்த நல்ல கருத்துகள் எல்லாமே திரும்ப எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களில் சொல்லப்பட்டன. முருகர், ராமர் போன்ற பாத்திரங்கள் அவர்களின் சமூகப் படங்களிலும் பிரதிபலித்தன. மகாபாரதப் பின்னணி, ரஜினி நடித்த தளபதி வரை நீண்டது. திரும்பத் திரும்ப இந்த மனிதர்களுக்கு நல்லொழுக்கத்தையும் தீயவர்களின் முடிவையும் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன இந்திய சினிமாக்கள். ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு அரசு ஆற்ற வேண்டிய அத்தனை கடமைகளையும் சினிமா ஆற்றி வந்திருக்கிறது. தனியொரு மனிதனுக்கு லட்சியம், கொள்கை எல்லாம் வேண்டும் என்பதை இங்கே சினிமாதான் முதன்முதலாக அறிவுறுத்தியது. அரசியல், பொருளாதாராம், கல்வி என் பல முக்கிய நடப்புகள் குறித்த விமர்சனங்களை சினிமாதான் முதன் முதலாக துணிச்சலாக இங்கே வெளிப்படுத்தியது. வேறு எந்த கலை சார்ந்த துறையினரும் அதில் முழுமையாகப் பங்கெடுக்கவே இல்லை. சமுதாயத்தில் நடக்கும் பல தவறுகளை சினிமாக்கள் சுட்டிக் காட்டின. அது இந்திய சினிமாவிற்கு கிடைத்த வெற்றி.


ஆனால் துரதிருஷ்டவசமாக, இந்த வெற்றிதான் இந்திய அரசாங்கத்திற்கு சினிமா மீது ஒருவித காழ்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியும் விட்டது. சினிமா என்றாலே மத்திய அரசு வெறுப்பதற்கு சினிமா மீதான அவர்களின் தவறான பார்வைதான் காரணம். எல்.வி.பிரசாத், ஏவி மெய்யப்ப செட்டியார், எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டி போன்றவர்கள் எந்தவிதமான படிப்பறிவும் இல்லாமல் சுலபமாக பணம் சம்பாதித்துவிட்டு சினிமாவில் நம்மையே விமர்சிக்கிறார்களே என்று ஆரம்பித்த அர்த்தமில்லாத கோபம், இந்த அரசாங்கத்திற்கு இருந்து கொண்டே இருக்கிறது. அது இன்றுவரை தொடர்கிறது. 1953லேயே ராஜ்ய சபா மெம்பராக இருந்த மிஸஸ் முன்ஸி என்பவர் சினிமாத்துறை ஒரு அபத்தக் குப்பையாக இருக்கிறது; ஆபாசமாக இருக்கிறது; இதைவிட மட்டமான மீடியம் கிடையாது, எனவே அதை உடனே தடை செய்ய வேண்டும் என்று சபையில் குரல் கொடுக்கிறார். அதே வருடத்தில் கேஸ்கர் என்ற ஆல் இண்டியா ரேடியோ தலைவராக இருந்தவர், சினிமா பாடல்களை ரேடியோவில் ஒலிபரப்பாவதை மூன்று வருடங்களுக்கு தடையே செய்திருக்கிறார்.


ஆனாலும் இத்தனை தடைகளையும் தாண்டி, இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாடாக இருப்பதற்கு சினிமா தன் முழு பங்களிப்பையும் செய்து வந்திருக்கிறது. இளைஞர்கள் மூலம் பல எதிர்ப்புகுரல்களை பதிவு செய்ய அது தூண்டுகோலாக இருந்திருக்கிறது. பல அரசியல் தலைவர்களை இந்த சினிமா உருவாக்கிறது


இத்தனை சிறப்புகளைக் கொண்ட இந்திய சினிமாவிற்கு சென்சார் என்கிற விஷயம்தான் மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கிறது. சினிமாவிற்குப் பின்னர் பிரபலமாகி இருக்கின்ற தினசரிகளுக்கு, வார மாத இதழ்களுக்கு, டிவி சேனல்களுக்கு, இண்டர் நெட்டுக்கு இங்கே சென்சார் கிடையாது. ஆனால் சினிமாவிற்கு மட்டும் சென்சார் என்பது ஒரு சாபக்கேடுதான். சினிமாவில் சொல்லப்படாத, சொல்ல முடியாத பல விஷயங்களை இன்றைக்கு மற்ற மீடியாக்களில் இன்று நாம் பார்க்கத்தான் செய்கிறோம். பிரிட்டிஷ்காரன் ஆண்டபோது சென்சார் இருந்ததில் நியாயம் இருக்கிறது. இந்த சுதந்திர நாட்டில் சினிமாவிற்கு மட்டும் எதற்கு சென்சார்?


அதே போல இன்னொரு கருத்தையும் இங்கே நான் இந்த நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன். சமீபத்தில் நான் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே பலதரப்பட்ட டெக்னாலஜி படிப்புகளும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. 1953ல் ஆரம்பிக்கப்பட்ட அங்கே, சினிமா பற்றிய படிப்பு மட்டும் இன்னும் துவங்கப்படாமலே இருக்கிறது. சிறப்பான ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங் போன்றவற்றை அங்கே சொல்லித் தரலாமே? சினிமா டெக்னிக்கை மட்டும் ஏன் அங்கே ஒதுக்க வேண்டும்?.
இன்னும் சொல்லப் போனால் இந்த சினிமா கல்வியை இங்கே பள்ளிகளிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். அங்கே செய்யுள், விளையாட்டு, ஓவியம் கற்றுத் தரப்படுகிறது. ஏன் சினிமா மொழியை கற்றுத்தர கூடாது? குளோசப், லாங் ஷாட், ஒரு கதையை எப்படி சொல்ல வேண்டும் என்கிற ஸ்டோரி போர்டு வழிமுறைகளை அங்கிருந்தே ஆரம்பிக்கலாமே? மாணவர்களிடத்தில் இதற்கு உற்சாகமான வரவேற்பு நிச்சயம் இருக்கும். காரணம் அவர்களின் பள்ளி வாழ்க்கையின் பாதி நாட்கள் சினிமாவில்தான் கழிகிறது. அதைப் பற்றிய தொழில் நுட்பத்தை அவன் ஏன் கற்றுக் கொள்ளக்கூடாது?


ஒரு அரசியல்வாதி சினிமாவில் ஹீரோக்கள் சிகரெட் பிடிப்பதால்தான் இளைஞர்கள் சிகரெட் பிடிக்கிறார்கள் என்று முட்டாள்தனமாக அறிவித்தார். உண்மையாலுமே இளைஞர்கள் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால் சிகரெட்டை தடை செய்யுங்கள். அந்த அதிகாரம் இல்லாதபோது சினிமாவைக் காரணம் காட்டி தப்பித்துக் கொள்ளாதீர்கள்.
இத்தனை குறைகளை வைத்துக் கொண்டு இந்திய சினிமா நூற்றாண்டைக் கொண்டாடுவதால் யாருக்கு என்ன லாபம்? சினிமா கலைஞர்களின் புகழ்பாடி அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துதான் இந்த நூற்றாண்டின் நோக்கமா? மக்கள் இந்த சினிமாவை ஏற்கனவே கொண்டாடிக் கொண்டாடி மகிழ்ந்து போனார்கள். அதை எங்கேயே எடுத்துச் சென்று விட்டார்கள். எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு கிடைக்காத வரவேற்பா? அவர்களுக்குக் கிடைக்காத பாராட்டா? கேரளாவில் பிரேம் நஸீர் 38 வருடங்களில் 610 படங்களில் நடித்திருக்கிறார். வருடத்திற்குச் சராசரியாக 12 படங்கள். அதாவது மாதம் ஒரு படம் என்கிற விகிதத்தில் அவரது படம் வந்து கொண்டே இருந்திருக்கிறது. பிரேம் நஸீர் என்பவரது ஒரே முகத்தை 38 வருடங்களாக மூன்று தலைமுறையினர் சலிக்காமல் பார்த்திருக்கிறார்கள் என்றால் அவரது திறமை என்ன சொல்வது? இப்படி வடக்கே பலரும் இந்திய சினிமாவிற்கு எத்தனையோ சாதனைகளைச் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.
இதுமாதிரி மிகச் சிறந்த எத்தனையோ கலைஞர்களை இந்த அரசாங்கம் கண்டு கொள்ளாமல் கெளரவிக்காமல் இருந்திருக்கிறது. ஆனால் கிரிக்கெட் என்ற பெயரில் சூதாட்டத்தில் பங்குபெறும், தனியார் பொருட்களை விற்பனை செய்ய, தன்னைத்தானே அந்த நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் விற்றுக் கொள்ளும், சச்சின் டெண்டுல்கருக்கு ராஜ்ய சபா எம்.பி. சீட் கொடுத்து பாரத ரத்னா விருதையும் கொடுக்கக் தயாராக இருக்கிறது, இந்த அரசாங்கம். அந்த வகையில் சினிமா கலைஞர்கள் என்ற முறையில் ரஜினியையும் கமலையும் நான் மனதார பாராட்டுகிறேன். எந்தவொரு பொருட்களுக்கும் இதுவரைக்கும் விளம்பரம் செய்ய அவர்கள் ஒப்புக் கொள்ளவே இல்லை. ‘நாங்கள் இந்த இடத்தில் இருப்பதற்கு காரணம் ஆடியன்ஸ் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை; பொருட்களுக்காக அதனை வீணடிக்க விரும்பவில்லை’ என்கிற அவர்களின் கொள்கையைப் பாராட்டியே தீர வேண்டும்.


இந்திய சினிமாவிற்கு இருக்கும் நடைமுறை சிக்கல்களை தீர்ப்பதற்கான ஒரு நேரமாகவே இந்த நூற்றாண்டை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான குரலை இங்கே நான் பதிவு செய்து விட்டேன். அது நிச்சயம் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கையும் இந்திய சினிமா எனக்குக் கொடுத்திருக்கிறது.
. சந்திப்பு: கல்யாண் குமார்






Saturday, June 16, 2012

காந்திக்கு மரியாதை

காந்தி – இந்தப் பெயரைக் கேட்டதும் பலருக்கும் தோன்றுவதெல்லாம் அவர் நமது தேசத்தந்தை; நம் நாட்டின் சுதந்திரத்திற்காக அஹிம்சை வழியில் போராடியவர்; அக்டோபர் இரண்டு அவர் பிறந்த நாள். அன்றைக்கு அனைவருக்கும் விடுமுறை கிடைக்கும் என்பது மட்டும்தான். ஆனால் அந்த மகானைப் பற்றிய பலரும் அறியாத செய்திகளோடு 120 நாடுகளுக்கும் மேலாக அவருக்கு கெளரவம் செய்யுமுகமாக வெளியிடப்பட்ட தபால் தலைகளின் சேகரிப்பையும் தனியொரு மனிதனாகச் செய்திருக்கும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ராஜேஷ் குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை இதழில்நான் எழுதியிருந்தேன். மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், இன்றும் அதே காந்தி பற்றிய சிந்தனைகளோடு, பள்ளிக் குழந்தைகளிடையே காந்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ராஜேஷ் தன் நண்பர்களுடன் இணைந்து ’காந்தி வேர்ல்டு பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையைத் துவக்கி காந்தி குறித்த கண்காட்சிகளை தமிழகம் முழுக்க நடத்த திட்டமிட்டிருக்கிறார். சென்ற வாரம் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காந்தி குறித்தான கண்காட்சியைத் துவக்கி வைத்ததோடு, ராஜேஷையும் அவரது அறக்கட்டளையையும் மனம்விட்டு வாழ்த்திப் பேசியிருக்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ.அப்துல்கலாம். பள்ளிக்குழந்தைகளுகாக துவக்கப்பட்ட இந்த காந்தி குறித்தான கண்காட்சியைப் பற்றி கேள்விப்பட்டு குமரி அனந்தன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோர் திடீர் விசிட் அடித்து கண்காட்சியை பார்வையிட்டு வாழ்த்திச் சென்றிருக்கிறார்கள். அதன் நிறைவு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எனது அன்பான வேண்டுகோளை ஏற்று, அதில் பங்கேற்றுச் சிறப்பித்த நடிகர், சமூக சிந்தனையாளர் நண்பர் விவேக் அவர்களுக்கு என் இனிய நன்றிகளை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ராஜேஷ் அவர்களின் இந்த அறக்கட்டளை மென்மேலும் வளர்ந்து காந்தியின் புகழை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு உலகம் முழுக்க கொண்டு செல்லும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவரோடு இணைந்து செயலாற்றும் அந்த அறக்கட்டளையின் டிரஸ்ட்டி திரு. ஜி.ஷ்யாம் சுந்தர் அவர்களுக்கும் ராஜேஷின் துணைவியாரும் அதன் மானேஜிங் டிரஸ்ட்டியுமான திருமதி. ஆர்.விஜயலஷ்மி மற்றும் ராஜேஷிற்கு உதவிபுரியும் நண்பர்கள், தன்னார்வ தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் சொல்லிக் கொள்கிறேன். நீங்களும் வாழ்த்தலாமே? ராஜேஷ் தொடர்பு எண்: 9444019030 / www.gandhiworld.in

Wednesday, February 29, 2012

ராஜா ராஜாதான்




ராஜா சார் என்று தமிழ் சினிமா உலகில் மிக மரியாதையோடு அழைக்கப்படும் இளையராஜாவின் ஒரு சில படங்களில் ஒரு உதவி இயக்குனராக எண்பதுகளில் நான் பணிபுரிந்த நாட்கள் மிக இனிமையானவை. அவரது இசைக் கோர்ப்பில் ஒரு பாடல் முழுமை பெறுவதை மிக அருகிலிருந்து அடிக்கடி பார்த்தும் கேட்டும் ரசித்தவன்.

பிரசாத் ஸ்டூடியோவில் காலை சரியாக ஆறரை மணிக்கெல்லாம் தினசரி ராஜா சாரின் வெள்ளை நிற அம்பாசிடர் கார் உள்ளே நுழையும் தும்பைப் பூவாய் அதிலிருந்து இறங்கும் அவர் தன் பிரத்யேக அறைக்குள் போய் அமர்ந்து கொள்வார். அங்கே ப்ரேம் செய்யப்பட்ட, லேமினேட் செய்யப்ப்ட்ட அவருக்குப் பிடித்தமான சில ஆன்மீகப் பெரியவர்கள் படத்தின் அருகில் ஏற்றப்பட்டிருக்கும் ஊதுபத்தி வாசனையில் அந்த அறையே ஒரு ரம்மியமான சூழ்நிலையை உணர்த்தும். அன்றைக்கு ஒரு படத்தின் ரீ ரிக்கார்டிங்கா அல்லது பாடல் பதிவா, அது யார் படம் என்ற விபரங்களை அவரது மானேஜர் கல்யாணம் மிகப் பணிவோடு அவர் அருகே வந்து நின்றபடியே சொல்வார். பாடல் என்றால் அதை யார் பாட வேண்டும் என்று கேட்டுக் கொள்வார் கல்யாணம். பாலுவைக் கூப்புடு, சுசிலாம்மாக்கு சொல்லிடு என்று ஒன்றிரண்டு வார்த்தைகளே ராஜா சாரிடமிருந்து பதிலாக வரும்.

ஏற்கனவே வந்து அந்த அறையில் தயாராக இருக்கும் அவரது இசை உதவியாளர் சுந்தர்ராஜன் அண்ணன், அன்றைய பாடல் பதிவுக்குரிய ட்யூன் அடங்கிய கேஸட்டை ஒரு குட்டி டேப் ரிக்கார்டரில் போட்டுக் காட்டுவார். அது அனேகமாக ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ராஜா சாரால் கம்போஸிங் செய்த ட்யூனாக இருக்கும். அவரது குரலில் தத்தகாரத்தில் ஒலிக்கும் அதை ஒருமுறைதான் ராஜா சார் கேட்பார். (பாடல் கம்போஸிங் நாட்கள் பற்றி பிறகு விவரிக்கிறேன்.) பின்னர் வெளியே காத்திருக்கும் அந்தப் படத்தின் இயக்குனரை வரச் சொல்லி, அந்தப் பாடலுக்கான சூழ்நிலையை சுருக்கமாக மறுபடி ஒருமுறை கேட்டுக் கொள்வார்.

பின்னர் சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பி அருகிலேயே இருக்கும் ரிக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு வருவார். ஏற்கனவே அங்கே தயாராக இருக்கும் வாத்திய கலைஞர்கள் அதுவரை பள்ளிக்கூட பிள்ளைகளைப் போல அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். ராஜா சார் உள்ளே நுழைந்ததும் அந்த அறையே சட்டென நிசப்தமாகும். அன்றைய தினம் ரிக்கார்டிங் செய்யப்பட வேண்டிய பாடலுக்கான பி.ஜி.எம். நோட்ஸை அங்கே உட்கார்ந்துதான் ஒரு அரைமணி நேரம் மட்டுமே எழுதுவார் ராஜா சார். சம்பந்தப்பட்ட வாத்திய இசைக்காரர்கள் அதைப் பார்த்து தங்களுக்கான நோட்ஸை மட்டும் எழுதிக் கொள்வார்கள். கீ போர்டு, பேஸ் கிடார், எலக்ட்டிரிக் கிடார், வயலின், தபேலா, செல்லோ, சாக்ஸஃபோன், வீணை, டிரம்ஸ், புல்லாங்குழல் இப்படி அந்தப் பாடலுக்கு எது தேவையோ அவர்கள் மட்டும் வந்திருப்பார்கள்.

வயலின் கலைஞர்கள் மட்டுமே சுமார் ஐம்பது பேர் இருப்பார்கள். அந்த ஐம்பது பேரில் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணும் இருப்பார். இப்போது காணக் கிடைக்காத லூனா என்ற இரண்டு சக்கர வாகனத்தில் ஒரு சிறுமியை நிற்க வைத்து அழைத்து வருவதைப் போல அவர் தன் வயலின் பெட்டியுடன் பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் நுழைவதை பல நாட்கள் பார்த்திருக்கிறேன். யாரிடமும் எதுவும் பேச மாட்டார். நோட்ஸை குறித்துக் கொள்வார், வாசிப்பார், ரிக்கார்டிங் முடிந்து முழுப்பாடலையும் கேட்டு ராஜா சார் ஓக்கே சொன்னதும் வயலினை அதன் பெட்டிக்கும் லாவகமாக வைத்துப் பூட்டினால் அடுத்த நிமிஷம் லூனா அதே சிறுமியோடு கிளம்பிப் போகும்.

வயலின் கலைஞர்களோடு சேர்த்து ஒரு பாடலுக்கு எண்பது பேர் வரை என்று அந்தச் சபை இசையால் நிரம்பி வழியும். நோட்ஸ் எடுத்துக் கொள்ள அரைமணி நேரம்தான் கொடுப்பார் ராஜா சார். ரிகர்சல் போலாமா என்று மைக்கில் கேட்பார். வாத்தியங்கள் வாரியாக ரிகர்சல் ஆரம்பிக்கும். முதலில் வயலின். ஐம்பது வயலின் எல்போக்களும் ஒரே மாதிரி உயர்ந்து தாழ்ந்து அன்றைய இசை மழையை ஆரம்பித்து வைக்கும். கண்ணாடி அறைக்குள் ரிக்கார்டிங் என்ஜினியர் அருகே அமர்ந்திருக்கும் ராஜா சார் அதைக் கவனமாகக் கேட்பார். சீட்டிலிருந்து எழுந்து ஒருத்தரை மட்டும் அடையாளம் காட்டி அவரை மட்டும் அந்த நோட்ஸை திரும்ப வாசிக்கச் சொல்லுவார். அவரது வாசிப்பில் எதோ ஒரு குறை இருப்பதை சுட்டிக்காட்டி நோட்ஸை சரியாகப் படித்து திருத்திக் கொள்ளச் சொல்வார். ஐம்பது வயலின்கள் எழுப்பிய இசையில் அந்த ஒரு கலைஞரின் வாசிப்பு மட்டும் தன் நோட்ஸைவிட்டு விலகிச் சென்றிருப்பதை அவர் எப்படி கண்டு பிடித்தார் என்பது வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த எனக்கு மட்டுமல்ல, அந்த வயலின் கலைஞர்களே அசந்து போகும் விஷயம்.

பின்னர் ரிதம் செக்‌ஷன் ரிகர்சல், தபேலா, ஃபேஸ் கிடார் என்று தனித்தனியாக வாசித்து ராஜா சாருக்கு திருப்தி என்றதும் அனைத்து கருவிகளுடனும் மொத்தமாக ஒரு ரிகர்சல் நடக்கும். அது முடிகிற போது நேரம் சரியாக காலை பத்து மணி ஆகியிருக்கும்.

டிபன் பிரேக்.

அரைமணி நேரத்தில் அனைவரும் திரும்பி வந்து ரிக்கார்டிங் போக தயாராக இருப்பார்கள். மறுபடி ஒரு ரிகர்சல். கீ போர்டு வாசிக்கும் ஜிஜி மானுவேலோ, புருசோத்தமனோ ராஜா சாரின் நோட்ஸ் பார்த்து கண்டக்ட் செய்ய அத்தனை வாத்தியங்களும் மூன்று நிமிஷ நேரம் உற்சாக பீறிட இசையை வெளிப்படுத்தி குதூகலிக்கும் காட்சி ஆகா. அடுத்த ஒன்றரை மணியில் மொத்த ரிகர்சலும் ஓக்கே. இனி ரிக்கார்டிங்தான். அது கூட டிராக் மூலம்தான் என்பதால் ஒவ்வொரு செக்‌ஷனாக வாசிக்க வாசிக்க பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார் என்ஜினியர். அருகிலிருந்து அதில் மாற்றமோ ஏற்றமோ சின்னச் சின்னதாய செய்து கொண்டிருப்பார் ராஜா சார். முழுசாக அந்தப் பாடல் எப்படி வரப்போகிறது என்பது அப்போதுவரை அருகிலிருந்து கேட்பவருக்கு அதுவரை தெரியாது.
அந்தப் பாடலுக்கு யார் பாட வேண்டும் என்று ஏற்கனவே ராஜா சாரால் சொல்லப்பட்டிருந்த பாடகரோ பாடகியோ உள்ள வந்து ராஜா சாருக்கு ஒரு வணக்கம் வைப்பார்கள். அப்போது மணி சரியாக பன்னிரெண்டு இருக்கும். பின்னர் வாய்ஸ் மிக்ஸிங். முதலில் டியூனுக்கான நோட்ஸ்களை பாடகர் எழுதிக் கொள்வார். அந்த இடைவெளியில் ஏறகனவே பாடலாசிரியரால் எழுதப்பட்டு வந்திருக்கும் பாடல் வரிகளை ராசா சாரிடம் கொடுப்பார் அந்தப் படத்தின் இயக்குனர். ட்யூனுக்கு வரிகள் ஒத்துப் போகிறதா என்பதை ஒருமுறை பாடிப்பார்த்துக் கொள்ளும் அவர் அதை பாடகரிடம் அனுப்பி வைக்க ட்யூனோடு அந்தப் பாடல் வரிகளையும் தங்கள் டைரியில் எழுதிக் கொள்வார் பாடகர். எஸ்.பி.பி. இதற்கென தனியாக ஒரு பெரிய டைரியே வைத்திருப்பார். அந்தப் பாடலின் வரிகளை தெலுங்கில் எழுதிக் கொள்ளும் அவர் அந்தப் படத்தின் கம்பெனி, டைட்டில், ரிக்கார்டிங் தேதி, அது தனக்கு எத்தனையாவது பாடல் என்பது உட்பட அனைத்தையும் அதில் குறித்துக் கொள்வார்.
இதெல்லாம் முடிகிற போது சுமார் ஒரு மணி ஆகியிருக்கும். பாடல் வரிகளை மட்டும் ஒருமுறை பாடச் சொல்லி கேட்கும் ராஜா சார் அதில் சில சங்கீத பாஷையில் சில அறிவுரைகளை வழங்குவார். ஒருமுறையோ இரண்டு முறையோதான் அதற்கான ரிகர்சல். உடனே டேக். ஏற்கனவே ரிக்கார்டிங் செய்யப்பட்ட பி.ஜி.எம் டிராக்கோடு பாடகரின் வாய்ஸையும் சேர்த்து ஒருமித்த ஒரு பாடலாக ஒலிக்கச் செய்வார் என்ஜினியர். அடடா அதுதான் அற்புத நிமிடங்கள்....

காலை ஏழு மணிக்கு கருத்தரித்த ராஜா சாரின் இசை அறிவு மதியம் இரண்டு மணிக்கெல்லாம் ஒரு குழந்தையை பாடல் வடிவில் காற்றில் தவழ விடும் நேர்த்தியும் வேகமும் பிரம்மிக்க வைக்கும் அதிசயம். இப்படி எத்தனையோ ஹிட் பாடல்களை அவர் வடித்தெடுத்த வேளைகளில் உடனிருந்து பார்த்து ரசித்த நான், அந்த இசை மேதையோடு பணிபுரிந்த சில படங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்....

நூறாவது நாள், இளமைக் காலங்கள், உதய கீதம், உன்னை நான் சந்தித்தேன், நினைவே ஒரு சங்கீதம், கீதாஞ்சலி, இங்கேயும் ஒரு கங்கை, மனிதனின் மறுபக்கம், உனக்காகவே வாழ்கிறேன்......

ராஜாவைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். சொல்லிக் கொண்டே இருப்பேன்....