Saturday, June 16, 2012

காந்திக்கு மரியாதை

காந்தி – இந்தப் பெயரைக் கேட்டதும் பலருக்கும் தோன்றுவதெல்லாம் அவர் நமது தேசத்தந்தை; நம் நாட்டின் சுதந்திரத்திற்காக அஹிம்சை வழியில் போராடியவர்; அக்டோபர் இரண்டு அவர் பிறந்த நாள். அன்றைக்கு அனைவருக்கும் விடுமுறை கிடைக்கும் என்பது மட்டும்தான். ஆனால் அந்த மகானைப் பற்றிய பலரும் அறியாத செய்திகளோடு 120 நாடுகளுக்கும் மேலாக அவருக்கு கெளரவம் செய்யுமுகமாக வெளியிடப்பட்ட தபால் தலைகளின் சேகரிப்பையும் தனியொரு மனிதனாகச் செய்திருக்கும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ராஜேஷ் குறித்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை இதழில்நான் எழுதியிருந்தேன். மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் பெட்ரோலியத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், இன்றும் அதே காந்தி பற்றிய சிந்தனைகளோடு, பள்ளிக் குழந்தைகளிடையே காந்தி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ராஜேஷ் தன் நண்பர்களுடன் இணைந்து ’காந்தி வேர்ல்டு பவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளையைத் துவக்கி காந்தி குறித்த கண்காட்சிகளை தமிழகம் முழுக்க நடத்த திட்டமிட்டிருக்கிறார். சென்ற வாரம் அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இதன் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காந்தி குறித்தான கண்காட்சியைத் துவக்கி வைத்ததோடு, ராஜேஷையும் அவரது அறக்கட்டளையையும் மனம்விட்டு வாழ்த்திப் பேசியிருக்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜெ.அப்துல்கலாம். பள்ளிக்குழந்தைகளுகாக துவக்கப்பட்ட இந்த காந்தி குறித்தான கண்காட்சியைப் பற்றி கேள்விப்பட்டு குமரி அனந்தன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ஆகியோர் திடீர் விசிட் அடித்து கண்காட்சியை பார்வையிட்டு வாழ்த்திச் சென்றிருக்கிறார்கள். அதன் நிறைவு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எனது அன்பான வேண்டுகோளை ஏற்று, அதில் பங்கேற்றுச் சிறப்பித்த நடிகர், சமூக சிந்தனையாளர் நண்பர் விவேக் அவர்களுக்கு என் இனிய நன்றிகளை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். ராஜேஷ் அவர்களின் இந்த அறக்கட்டளை மென்மேலும் வளர்ந்து காந்தியின் புகழை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு உலகம் முழுக்க கொண்டு செல்லும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவரோடு இணைந்து செயலாற்றும் அந்த அறக்கட்டளையின் டிரஸ்ட்டி திரு. ஜி.ஷ்யாம் சுந்தர் அவர்களுக்கும் ராஜேஷின் துணைவியாரும் அதன் மானேஜிங் டிரஸ்ட்டியுமான திருமதி. ஆர்.விஜயலஷ்மி மற்றும் ராஜேஷிற்கு உதவிபுரியும் நண்பர்கள், தன்னார்வ தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் சொல்லிக் கொள்கிறேன். நீங்களும் வாழ்த்தலாமே? ராஜேஷ் தொடர்பு எண்: 9444019030 / www.gandhiworld.in

No comments: