Wednesday, February 29, 2012

ராஜா ராஜாதான்




ராஜா சார் என்று தமிழ் சினிமா உலகில் மிக மரியாதையோடு அழைக்கப்படும் இளையராஜாவின் ஒரு சில படங்களில் ஒரு உதவி இயக்குனராக எண்பதுகளில் நான் பணிபுரிந்த நாட்கள் மிக இனிமையானவை. அவரது இசைக் கோர்ப்பில் ஒரு பாடல் முழுமை பெறுவதை மிக அருகிலிருந்து அடிக்கடி பார்த்தும் கேட்டும் ரசித்தவன்.

பிரசாத் ஸ்டூடியோவில் காலை சரியாக ஆறரை மணிக்கெல்லாம் தினசரி ராஜா சாரின் வெள்ளை நிற அம்பாசிடர் கார் உள்ளே நுழையும் தும்பைப் பூவாய் அதிலிருந்து இறங்கும் அவர் தன் பிரத்யேக அறைக்குள் போய் அமர்ந்து கொள்வார். அங்கே ப்ரேம் செய்யப்பட்ட, லேமினேட் செய்யப்ப்ட்ட அவருக்குப் பிடித்தமான சில ஆன்மீகப் பெரியவர்கள் படத்தின் அருகில் ஏற்றப்பட்டிருக்கும் ஊதுபத்தி வாசனையில் அந்த அறையே ஒரு ரம்மியமான சூழ்நிலையை உணர்த்தும். அன்றைக்கு ஒரு படத்தின் ரீ ரிக்கார்டிங்கா அல்லது பாடல் பதிவா, அது யார் படம் என்ற விபரங்களை அவரது மானேஜர் கல்யாணம் மிகப் பணிவோடு அவர் அருகே வந்து நின்றபடியே சொல்வார். பாடல் என்றால் அதை யார் பாட வேண்டும் என்று கேட்டுக் கொள்வார் கல்யாணம். பாலுவைக் கூப்புடு, சுசிலாம்மாக்கு சொல்லிடு என்று ஒன்றிரண்டு வார்த்தைகளே ராஜா சாரிடமிருந்து பதிலாக வரும்.

ஏற்கனவே வந்து அந்த அறையில் தயாராக இருக்கும் அவரது இசை உதவியாளர் சுந்தர்ராஜன் அண்ணன், அன்றைய பாடல் பதிவுக்குரிய ட்யூன் அடங்கிய கேஸட்டை ஒரு குட்டி டேப் ரிக்கார்டரில் போட்டுக் காட்டுவார். அது அனேகமாக ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ராஜா சாரால் கம்போஸிங் செய்த ட்யூனாக இருக்கும். அவரது குரலில் தத்தகாரத்தில் ஒலிக்கும் அதை ஒருமுறைதான் ராஜா சார் கேட்பார். (பாடல் கம்போஸிங் நாட்கள் பற்றி பிறகு விவரிக்கிறேன்.) பின்னர் வெளியே காத்திருக்கும் அந்தப் படத்தின் இயக்குனரை வரச் சொல்லி, அந்தப் பாடலுக்கான சூழ்நிலையை சுருக்கமாக மறுபடி ஒருமுறை கேட்டுக் கொள்வார்.

பின்னர் சற்று நேரத்தில் அங்கிருந்து கிளம்பி அருகிலேயே இருக்கும் ரிக்கார்டிங் ஸ்டூடியோவிற்கு வருவார். ஏற்கனவே அங்கே தயாராக இருக்கும் வாத்திய கலைஞர்கள் அதுவரை பள்ளிக்கூட பிள்ளைகளைப் போல அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். ராஜா சார் உள்ளே நுழைந்ததும் அந்த அறையே சட்டென நிசப்தமாகும். அன்றைய தினம் ரிக்கார்டிங் செய்யப்பட வேண்டிய பாடலுக்கான பி.ஜி.எம். நோட்ஸை அங்கே உட்கார்ந்துதான் ஒரு அரைமணி நேரம் மட்டுமே எழுதுவார் ராஜா சார். சம்பந்தப்பட்ட வாத்திய இசைக்காரர்கள் அதைப் பார்த்து தங்களுக்கான நோட்ஸை மட்டும் எழுதிக் கொள்வார்கள். கீ போர்டு, பேஸ் கிடார், எலக்ட்டிரிக் கிடார், வயலின், தபேலா, செல்லோ, சாக்ஸஃபோன், வீணை, டிரம்ஸ், புல்லாங்குழல் இப்படி அந்தப் பாடலுக்கு எது தேவையோ அவர்கள் மட்டும் வந்திருப்பார்கள்.

வயலின் கலைஞர்கள் மட்டுமே சுமார் ஐம்பது பேர் இருப்பார்கள். அந்த ஐம்பது பேரில் ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணும் இருப்பார். இப்போது காணக் கிடைக்காத லூனா என்ற இரண்டு சக்கர வாகனத்தில் ஒரு சிறுமியை நிற்க வைத்து அழைத்து வருவதைப் போல அவர் தன் வயலின் பெட்டியுடன் பிரசாத் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் நுழைவதை பல நாட்கள் பார்த்திருக்கிறேன். யாரிடமும் எதுவும் பேச மாட்டார். நோட்ஸை குறித்துக் கொள்வார், வாசிப்பார், ரிக்கார்டிங் முடிந்து முழுப்பாடலையும் கேட்டு ராஜா சார் ஓக்கே சொன்னதும் வயலினை அதன் பெட்டிக்கும் லாவகமாக வைத்துப் பூட்டினால் அடுத்த நிமிஷம் லூனா அதே சிறுமியோடு கிளம்பிப் போகும்.

வயலின் கலைஞர்களோடு சேர்த்து ஒரு பாடலுக்கு எண்பது பேர் வரை என்று அந்தச் சபை இசையால் நிரம்பி வழியும். நோட்ஸ் எடுத்துக் கொள்ள அரைமணி நேரம்தான் கொடுப்பார் ராஜா சார். ரிகர்சல் போலாமா என்று மைக்கில் கேட்பார். வாத்தியங்கள் வாரியாக ரிகர்சல் ஆரம்பிக்கும். முதலில் வயலின். ஐம்பது வயலின் எல்போக்களும் ஒரே மாதிரி உயர்ந்து தாழ்ந்து அன்றைய இசை மழையை ஆரம்பித்து வைக்கும். கண்ணாடி அறைக்குள் ரிக்கார்டிங் என்ஜினியர் அருகே அமர்ந்திருக்கும் ராஜா சார் அதைக் கவனமாகக் கேட்பார். சீட்டிலிருந்து எழுந்து ஒருத்தரை மட்டும் அடையாளம் காட்டி அவரை மட்டும் அந்த நோட்ஸை திரும்ப வாசிக்கச் சொல்லுவார். அவரது வாசிப்பில் எதோ ஒரு குறை இருப்பதை சுட்டிக்காட்டி நோட்ஸை சரியாகப் படித்து திருத்திக் கொள்ளச் சொல்வார். ஐம்பது வயலின்கள் எழுப்பிய இசையில் அந்த ஒரு கலைஞரின் வாசிப்பு மட்டும் தன் நோட்ஸைவிட்டு விலகிச் சென்றிருப்பதை அவர் எப்படி கண்டு பிடித்தார் என்பது வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த எனக்கு மட்டுமல்ல, அந்த வயலின் கலைஞர்களே அசந்து போகும் விஷயம்.

பின்னர் ரிதம் செக்‌ஷன் ரிகர்சல், தபேலா, ஃபேஸ் கிடார் என்று தனித்தனியாக வாசித்து ராஜா சாருக்கு திருப்தி என்றதும் அனைத்து கருவிகளுடனும் மொத்தமாக ஒரு ரிகர்சல் நடக்கும். அது முடிகிற போது நேரம் சரியாக காலை பத்து மணி ஆகியிருக்கும்.

டிபன் பிரேக்.

அரைமணி நேரத்தில் அனைவரும் திரும்பி வந்து ரிக்கார்டிங் போக தயாராக இருப்பார்கள். மறுபடி ஒரு ரிகர்சல். கீ போர்டு வாசிக்கும் ஜிஜி மானுவேலோ, புருசோத்தமனோ ராஜா சாரின் நோட்ஸ் பார்த்து கண்டக்ட் செய்ய அத்தனை வாத்தியங்களும் மூன்று நிமிஷ நேரம் உற்சாக பீறிட இசையை வெளிப்படுத்தி குதூகலிக்கும் காட்சி ஆகா. அடுத்த ஒன்றரை மணியில் மொத்த ரிகர்சலும் ஓக்கே. இனி ரிக்கார்டிங்தான். அது கூட டிராக் மூலம்தான் என்பதால் ஒவ்வொரு செக்‌ஷனாக வாசிக்க வாசிக்க பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார் என்ஜினியர். அருகிலிருந்து அதில் மாற்றமோ ஏற்றமோ சின்னச் சின்னதாய செய்து கொண்டிருப்பார் ராஜா சார். முழுசாக அந்தப் பாடல் எப்படி வரப்போகிறது என்பது அப்போதுவரை அருகிலிருந்து கேட்பவருக்கு அதுவரை தெரியாது.
அந்தப் பாடலுக்கு யார் பாட வேண்டும் என்று ஏற்கனவே ராஜா சாரால் சொல்லப்பட்டிருந்த பாடகரோ பாடகியோ உள்ள வந்து ராஜா சாருக்கு ஒரு வணக்கம் வைப்பார்கள். அப்போது மணி சரியாக பன்னிரெண்டு இருக்கும். பின்னர் வாய்ஸ் மிக்ஸிங். முதலில் டியூனுக்கான நோட்ஸ்களை பாடகர் எழுதிக் கொள்வார். அந்த இடைவெளியில் ஏறகனவே பாடலாசிரியரால் எழுதப்பட்டு வந்திருக்கும் பாடல் வரிகளை ராசா சாரிடம் கொடுப்பார் அந்தப் படத்தின் இயக்குனர். ட்யூனுக்கு வரிகள் ஒத்துப் போகிறதா என்பதை ஒருமுறை பாடிப்பார்த்துக் கொள்ளும் அவர் அதை பாடகரிடம் அனுப்பி வைக்க ட்யூனோடு அந்தப் பாடல் வரிகளையும் தங்கள் டைரியில் எழுதிக் கொள்வார் பாடகர். எஸ்.பி.பி. இதற்கென தனியாக ஒரு பெரிய டைரியே வைத்திருப்பார். அந்தப் பாடலின் வரிகளை தெலுங்கில் எழுதிக் கொள்ளும் அவர் அந்தப் படத்தின் கம்பெனி, டைட்டில், ரிக்கார்டிங் தேதி, அது தனக்கு எத்தனையாவது பாடல் என்பது உட்பட அனைத்தையும் அதில் குறித்துக் கொள்வார்.
இதெல்லாம் முடிகிற போது சுமார் ஒரு மணி ஆகியிருக்கும். பாடல் வரிகளை மட்டும் ஒருமுறை பாடச் சொல்லி கேட்கும் ராஜா சார் அதில் சில சங்கீத பாஷையில் சில அறிவுரைகளை வழங்குவார். ஒருமுறையோ இரண்டு முறையோதான் அதற்கான ரிகர்சல். உடனே டேக். ஏற்கனவே ரிக்கார்டிங் செய்யப்பட்ட பி.ஜி.எம் டிராக்கோடு பாடகரின் வாய்ஸையும் சேர்த்து ஒருமித்த ஒரு பாடலாக ஒலிக்கச் செய்வார் என்ஜினியர். அடடா அதுதான் அற்புத நிமிடங்கள்....

காலை ஏழு மணிக்கு கருத்தரித்த ராஜா சாரின் இசை அறிவு மதியம் இரண்டு மணிக்கெல்லாம் ஒரு குழந்தையை பாடல் வடிவில் காற்றில் தவழ விடும் நேர்த்தியும் வேகமும் பிரம்மிக்க வைக்கும் அதிசயம். இப்படி எத்தனையோ ஹிட் பாடல்களை அவர் வடித்தெடுத்த வேளைகளில் உடனிருந்து பார்த்து ரசித்த நான், அந்த இசை மேதையோடு பணிபுரிந்த சில படங்களை மட்டும் இங்கே பட்டியலிடுகிறேன்....

நூறாவது நாள், இளமைக் காலங்கள், உதய கீதம், உன்னை நான் சந்தித்தேன், நினைவே ஒரு சங்கீதம், கீதாஞ்சலி, இங்கேயும் ஒரு கங்கை, மனிதனின் மறுபக்கம், உனக்காகவே வாழ்கிறேன்......

ராஜாவைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். சொல்லிக் கொண்டே இருப்பேன்....

19 comments:

Unknown said...

சூப்பர் கல்யாண் சார். அருமையான பகிர்வு. ராஜாவுடனான உங்களது அனுபவங்களை நிறைய எழுதுங்கள். என் Facebook-ல் உள்ள அனைத்து ராஜா ரசிக நண்பர்களுக்கும் உங்கள் பகிர்வைப் பகிர்கிறேன். வாழ்த்துக்கள் சார். நன்றி. முருகானந்தம்.

Unknown said...

சூப்பர் கல்யாண் சார். ராஜாவுடனான உங்களது அனுபவங்களை நிறைய எழுதுங்கள். உங்கள் பகிர்வை எனது Facebook-ல் உள்ள அனைத்து ராஜா ரசிக நண்பர்களுக்கும் பகிர்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி. முருகானந்தம்.

goma said...

ஒரு பாடலின் உதயம் ஒரு பிரசவம் போல் அல்லவா இருக்கிறது.
பிறந்த குழந்தையைக் கையில் ஏந்துவது போலான மகிழ்ச்சியை முழுப் பாடலும் கேட்க்கும் பொழுது அடைந்திருப்பீர்கள்.

நம்பிக்கைபாண்டியன் said...

காணக் கிடைக்காத லூனா என்ற இரண்டு சக்கர வாகனத்தில் ஒரு சிறுமியை நிற்க வைத்து அழைத்து வருவதைப் போல அவர் தன் வயலின் பெட்டியுடன்.................. அடுத்த நிமிஷம் லூனா அதே சிறுமியோடு கிளம்பிப் போகும்.

காலை ஏழு மணிக்கு கருத்தரித்த ராஜா சாரின் இசை அறிவு மதியம் இரண்டு மணிக்கெல்லாம் ஒரு குழந்தையை பாடல் வடிவில் காற்றில் தவழ விடும் நேர்த்தியும் வேகமும் பிரம்மிக்க வைக்கும் அதிசயம்.

ஆங்காங்கே தெளித்த கவிதை நயத்துடன் அழகான மலரும் நினைவுகள்! மேலும் பகிருங்கள்!

ARASIAL said...

ராஜாவின் ஒரு ரசிகனாக பரவசம் பரவசம் பரவசம்...

இசைஞானி பக்தன் said...

அற்புதமான பதிவு அண்ணா..! நேற்று Facebook முழுவதும் பரபரப்பாகப் பகிரப்பட்டது தங்களின் இந்தக் கட்டுரையே..! இசைஞானியுடனான தங்கள் நினைவுகளை இன்னும் இன்னும் இன்னும் இன்னும் நிறைய பகிர்ந்து கொள்ளுங்கள். படிக்க ஆவலாக இருக்கிறோம். நன்றி! :-)

துன்பென ஒன்றில்லை வாழ்வில் ராஜா
இசையமுது உண்ணப் பெறின்

Rathnavel Natarajan said...

ஐம்பது வயலின்கள் எழுப்பிய இசையில் அந்த ஒரு கலைஞரின் வாசிப்பு மட்டும் தன் நோட்ஸைவிட்டு விலகிச் சென்றிருப்பதை அவர் எப்படி கண்டு பிடித்தார் என்பது வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த எனக்கு மட்டுமல்ல, அந்த வயலின் கலைஞர்களே அசந்து போகும் விஷயம்.

அருமை. நேரில் பார்த்தாற் போன்ற உணர்வு. அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

r.v.saravanan said...

ராஜாவைப் பற்றி இன்னும் சொல்லிக் கொண்டே இருக்கலாம். நிறைய sollungal thanks

r.v.saravanan said...

ராஜாவைப் பற்றி சொல்லிக் கொண்டே இருக்கலாம்.

sollungal sir அருமை பகிர்வு.

கோபிநாத் said...

அருமையான பகிர்வு...தொடர்ந்து பகிருங்கள் ;-)

tamilraja said...

ஜி உங்களது சினிமா உலக அனுபவத்தை தொடர்கட்டுரையாக எழுதுங்கள்

tamilraja said...

நமது இசை வெளியீட்டு விழாவின் அழைப்பிதழ் எனது தளத்தில் உள்ளது .நேற்று பாக்கியராஜ் அவர்களை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தோம் நீண்ட நேரம் பேசினார்.பிறகு காதலில் சொதப்புவது எப்படி படத்தின் தெலுகு பதிப்பு எப்படி போகிறது என்று கேட்டார்
ஆந்திரா விநியகஸ்தர்களிடம் கேட்டு சொன்னேன் .சந்தோசப்பட்டார்.இன்று அதிகாலை அழைத்தார் காலை வாழ்த்து சொன்னார். நேற்று அழைப்பிதழ் கொடுத்தபோது கொஞ்சம் பிரமித்து போனார் கல்யாண்ஜி யார் கவிஞரா என்று கேட்டார் .இல்லை என்று உங்களைப்பற்றி சொன்னேன் அவரா பாடல் எல்லாம் எழுதுகிறாரா என்றார் நிறைய எழுதிவிட்டார் என்று சொன்னேன் உங்களை ஞாபகத்தில் வைத்திருக்கிறார் சமீபத்தில் சந்தித்தீர்களா!

கே. பி. ஜனா... said...

படிக்கவே அத்தனை பிரமிப்பாக இருக்கிறது! நேரில் பார்த்தவர்களுக்கு எப்படி இருக்கும்? அற்புதமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டதில் சந்தோஷம். நன்றி!

கடல்புறா said...

தூரத்து ரசிகனை அருகில் அழைத்து செல்லும் நடை.....

தன்னுடைய (என்) காலங்களில் அவருடன் ஒரு படத்திலாவது இணைய முடியுமா என்பது ஒவ்வொரு இயக்குனரின் கனவாய் இருக்கும்.....

இசை ஞானியுடன் இணையும் அந்த நாள் அவர்களின் சினிமா வாழ்க்கை.. பூர்த்தியான தினமாய் இருக்கும்...

கடல்புறா said...

தூரத்து ரசிகனை அருகில் அழைத்து செல்லும் நடை.....

தன்னுடைய (என்) காலங்களில் அவருடன் ஒரு படத்திலாவது இணைய முடியுமா என்பது ஒவ்வொரு இயக்குனரின் கனவாய் இருக்கும்.....

இசை ஞானியுடன் இணையும் அந்த நாள் அவர்களின் சினிமா வாழ்க்கை.. பூர்த்தியான தினமாய் இருக்கும்...

Unknown said...

அருமை... சூப்பர் கல்யாண் சார் ராஜாவுடன் உங்கள் சந்திப்பு மற்றும் பலவிதமான உங்கள் அனுபவங்களை சொல்லுங்கள் அருமையான நடை...

கீதாஞ்சலி

Unknown said...

ஐம்பது வயலின்கள் எழுப்பிய இசையில் அந்த ஒரு கலைஞரின் வாசிப்பு மட்டும் தன் நோட்ஸைவிட்டு விலகிச் சென்றிருப்பதை அவர் எப்படி கண்டு பிடித்தார் என்பது வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்த எனக்கு மட்டுமல்ல, அந்த வயலின் கலைஞர்களே அசந்து போகும் விஷயம்///அதனால தான் அவர் இசைஞானி....அவர் பாடல்கள் மட்டுமில்லை... அவரை பற்றி படிக்கும்போதே ஒரு சந்தோஷம் தானா வருது....

Unknown said...

மிகவும் கோர்வையான, first person விவரணை. இன்னமும் எழுதுங்கள். ராஜா’வை படிப்பதே ஒரு சுகம், பக்கத்தில் இருந்து அவரை முழுதாய் குடித்த போதை உங்கள் வரிகளில்!

Unknown said...

Hatsoff my dear Kalyan sir❤💐👍