Friday, January 20, 2012

நான் ரசித்த நாடகம்.... ’கீசகவதம்’(கொஞ்சம் லேட்டான விமர்சனம்)



புராணக் கதைகளை இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு, அவற்றில் சில பகுதிகளை நவீன நாடகமாக்கி மேடையேற்றுவதில் வெற்றி கண்டவர், கூத்துப்பட்டறை நா.முத்துசாமி. அவரது குழுவில் பயிற்சி பெற்று தற்போது டி விருக்‌ஷா என்ற குழுவை நடத்தி வரும் ஸ்ரீதேவி சமீபத்தில் அரங்கேற்றிய நாடகம் ’கீசக வதம்’.

நா.முத்துசாமி எழுதிய நாடக வடிவத்திற்கு முழு வடிவம் கொடுத்து அரங்கப் பொருட்களில் ஒன்றான மாமரம் ஒன்றை மையமாகப் பயன்படுத்தி நவீன நாடக அம்சங்களையும் சேர்த்து, முழுக் கதையையும் நகர்த்திச் சென்ற விதம் புதுமை. ஒரு வருடத்தில் நிகழக்கூடிய கதை சம்பவங்களை ஒன்றரை மணி நேரத்தில் சொல்லி பார்வையாளர்களை அசத்திய நடிகர்களிடம் கடுமையான பயிற்சியும், உழைப்பும் தெரிந்தது.

பாண்டவர்கள் 13 ஆண்டு வனவாசத்தில் கடைசி ஆண்டில் அஞ்ஞாத வாசம் எனப்படும் அடையாளம் தெரியாமல் மறைந்து வாழும் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள். விராட நாட்டு மன்னரிடம் வந்து கூத்தாடிகளாக அறிமுகப்படுத்திக் கொண்டு, வெவ்வேறு வேலைகளில் அமர்கிறார்கள். விராட மன்னனின் மைத்துனன கீசகன் வருணனையே கட்டுப்படுத்தும் சூரன். அவனுக்கு சைரேந்திரி என்ற பெயரில் வந்திருக்கும் திரௌபதியின்மேல் மோகம். தன்னை அடைய முயற்சிக்கும் அவனிடமிருந்து காக்கும்படி – சமையற்காரனாக வாழும் – பீமனிடம் அவள் கேட்க, அவன் கீசகனை தந்திரமாக வரவழைத்து வதம் செய்கிறான்.

பாஞ்சாலியாக நடித்த வைசாலி தெலுங்குப் பெண். அவருக்கு தமிழில் நீளமான வசனங்களைக் கொடுத்து நடிக்க வைத்த இயக்குனர் ஸ்ரீதேவியின் துணிச்சலைப் பாராட்டத்தான் வேண்டும். தருமராக வந்த பிரதீப், கீசகனாக வந்த ராம்குமார், கீசகனின் சகோதரி மற்றும் பீமனாக இருவேறு வேடங்களில் வந்த சுல்தான் போன்றவர்கள், ஏற்கனவே நாடகத் துறையிலிருந்து திரையில் ஜொலித்துக்கொண்டிருப்பவர்களைப் போல் (பசுபதி, விமல், வித்தார்த், விஜய சேதுபதி) எதிர்காலத்தில் திரை நட்சத்திரங்களாக ஜொலிக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

தருமராக வந்த பிரதீப் கலை சார்ந்த பெண்களை தொடர்ந்து இந்தச் சமூகம் ஏன் கேவலமாகவே பார்க்கிறது என்பதைக் கண்டித்துப் பாடும் பாடல், உண்மை கலந்த வேதனை.

2 comments:

முஹமது ரஃபிக் said...

மிக நீண்ட இடைவெளிக்குப் பின் தங்களின் பதிவினை கண்டு மகிழ்ச்சி. தொடர்ந்து பதிவிடுங்கள்.
அன்புடன்
அ. முஹமது ரஃபிக்

பிரதீப் said...

Thank you very much Sir!