Tuesday, December 23, 2008

பாலுமகேந்திரா பாராட்டிய கதை!

அன்பு நண்பர் கல்யாண் அவர்களுக்கு...

தாங்கள் ஆனந்த விகடனில் எழுதிய ‘அப்பாவுக்கு ஒரு
இ-மெயில் ‘ என்ற சிறுகதை படித்தேன். அந்தக்கதை என்னுள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வெளிவர பல நாட்களாயிற்று. அற்புதமான படைப்பு.

உள்ளடக்கத்தை உன்னதப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட உருவம்... அதன் இயல்புத் தன்மை... அதன் கம்பீரமான எளிமை... கதையாக்கத்தில் கையாளப்பட்டிருக்கும் உத்தி... இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து, ஓர் உன்னதமான கலைப்படைப்பைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. அப்பாவைப் பற்றிய ஆழமான உணர்வுகளை எந்தப் பிரயத்தனமுமின்றி வெகுஇயல்பாக வெளிப்படுத்த உங்களால் முடிந்திருக்கிறது.

இது ஒரு யுனிவர்சல் தீம் என்பதால் இந்தக் கதை பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்படலாம்.

வாழ்த்துக்களுடன்,
பாலுமகேந்திரா

சிறுகதை: அப்பாவுக்கு ஒரு இ-மெயில் - கல்யாண்குமார்
(ஆனந்தவிகடனில் முத்திரைக்கதையாக ரூ5,000 பரிசுபெற்ற எனது சிறுகதை)

அப்பாவிடமிருந்து வாரம் தவறாமல் ஒரு தபால் கார்டு வந்துவிடும். விஷேசமான செய்திகள் ஏதுமில்லையென்றாலும் பொதுவான் நலம் விசாரிபும், ‘இப்போது உன் வேலை விஷயம் எப்படியிருக்கிறது? புதிதாக கதை எதுவும் எழுதினாயா? என்று ஒரு நல்ல நண்பனைப் போல அக்கறையான விசாரிப்புகளும் இருக்கும். அவர் மரணம்கூட என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. ஆனால் அவரிடமிருந்து இனிமேல் கடிதங்கள் வரவே வராது என்பதுதான் அவரின் இழப்பைவிடக் கொடுமையானதாக இருந்தது.

யாரிடமிருந்து கடிதம் வந்தாலும் உடனே அதற்குப் பதில் எழுதி அடுத்த தெருவிலிருக்கும் தபால் ஆபீஸுக்குப் போய் தானே தன் கையால் போஸ்ட் செய்வதில்தான் அவருக்குத் திருப்தி. அதுவும் நான் கடிதம் எழுதிவிட்டால் உடனுக்குடன் பதில் வந்துவிடும். சமயத்தில் சொல்ல வேண்டிய விஷயம் சற்றுப் பெரிதாக இருந்தால்கூட இன்லேண்ட் லெட்டரிலோ அல்லது ஒரு பேப்பரில் எழுதி, கவரில் வைத்தோ அனுப்ப மாட்டார். இரண்டு கார்டுகள் சேர்ந்தாற்போல் வரும். அதில் ஒரு கார்டில் 1 என்றும் அடுத்ததில் 2 இரண்டு என்றும் எண்ணிட்டு வட்டமடித்திருப்பார் – சிவப்பு மையால்.

எப்போதுமே அப்பாவிடம் நிறைய கார்டுகள் இருக்கும். நான் எட்டாவது படிக்கிறபோதே என்னைவிட்டு சில கடிதங்களை எழுதச் சொல்வார். அவர் சொல்லச் சொல்ல நான் எழுத வேண்டும். விஷயமிருக்கிறதோ இல்லையோ, ‘உறவினர்களுக்கு, நண்பர்களுக்கு அப்பப்ப ஒரு நாலுவரி எழுதிப் போடறதுல என்னாகிடபோவுது’ என்பார். நான்கூட ஒருநாள் அவரைக் கிண்டலடித்திருக்கிறேன்...’’இப்படி அடிக்கடி கடிதம் எழுதறதால, என்ன பெருசா எழுதியிருக்கப் போறார்னு படிக்காமலே குப்பைக் கூடையிலே போட்டுடப் போறாங்க..’’ என்று!

‘’ அப்படி என்மேல மதிப்பு மரியாதை இல்லாத பயலுகளுக்கெல்லாம் நான் லெட்டர் போட்டதேயில்லை..’’ என்பார்.

நிஜம்தான். அப்பா இறந்தபோதுதான் அதை நான் உணர்ந்தேன். அவரின் மரணம் பற்றி துக்கம் விசாரிக்க ஒரு மாதம் கழித்து வந்தவர்கள்கூட அவர் போடும் கடிதங்கள் பற்றி சிலாகித்துப் பேசி ‘’ இனி யார் எங்களையெல்லாம் அக்கறையாய் விசாரித்து லெட்டர் போடப்போறாங்க..?’’ என்று ஆத்மார்த்தமாக வருத்தப்பட்டுக் கொண்டது என்னை மிகவும் சங்கடப்படுத்தியது. அன்றைக்கு அப்பாவிடம் அப்படிக் கிண்டலாக பேசியிருக்கக் கூடாதோ என்று தோன்றியது. அவர் எழுதிய கடிதங்களைப் பத்திரப்படுத்தி வைத்திருப்பதாக சிலர் சொன்னபோதுதான் அதுவரை உள்ளுக்குள்ளேயே அழுது கொண்டு இருந்த அம்மாகூட பெருங்குரலெடுத்து அழுது தீர்த்தாள்.

சென்னைக்கு வந்தபுதிதில் ஒரு இலக்கியப் பத்திரிக்கையில் நூற்றைம்பது ரூபாய் சம்பளத்தில் வேலையில் இருந்தபோது அப்பா எழுதிய கார்டுகள் மட்டும் சுமார் முன்னூறைத் தொடும். ‘உன்னுடைய கதை வந்த ‘கணையாழி’ புத்தகம் இங்கே பஸ் ஸ்டாண்ட் கடையிலேகூட கிடைக்கவில்லை. முடிந்தால் தபாலில் அனுப்பி வை. புக்போஸ்டில் அனுப்பினால் போதும். அதிகம் சிரமம் எடுத்துக் கொள்ளாதே’ என்கிற அவரது கடித வரிகள் இன்னும் மனசிலிருக்கின்றன.

பள்ளி நாட்கள் முடிந்து கதை கவிதை என்கிற பெயரில் ஒரு குயர் நோட்டுகளைத் தீர்த்துக் கொண்டிருந்த நாட்கள். பக்கத்துவீட்டு ஜெயாதான் கவிதையின் மையநாயகி. கடைசிவரை அவள் என்னைக் கண்டுகொள்ளவேயில்லை என்பது தனியொரு சோகக்கதை! அதைவிடக் கொடுமை என்னவென்றால், என்மீது ஒரு மரியாதை ஏற்படவும் என் தனித்துவத்தைக் காட்டவும் ஒருநாள் ‘கண்ணதாசன் கவிதைகள்’ புத்தகத்தை அவளிடம் படிக்கக் கொடுத்தேன். படித்துவிட்டு அதில் சில காதல் கவிதைகளில் நான் அடிக்கோடிட்டு இருப்பதைப் புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக எனக்குப் பதில் கொடுப்பாள் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் நடந்தது என்ன தெரியுமா? புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தவள், ‘’படிக்க எதாவது கதைப்புத்தகம் கொடுப்பீங்கன்னு பாத்தா, எதோ செய்யுள் புத்தகத்தைக் கொடுத்திருக்கீங்களே?’’ என்றாள்.

இதுவே ஒரு ஆரம்பக்கட்ட கவிஞனுக்கு மரண அடியாக இருந்தது. என் ப்ரிய நாயகி இப்படி ஒரு ஞான சூன்யமாக இருப்பாள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அந்த சோகத்திலேயே பல கவிதைகளை எழுதிக் குவித்தேன். கவிதைகளைத் தொடர்ந்து சிறுகதைகள். எப்படியோ ஒரு எழுத்தாளன் உருவாகிவிட்ட தீர்மானத்தோடு அந்த சோகத்திலும் ஒருவித திமிர் சேர்ந்து, சக நண்பர்களிடம் அவர்களுக்குப் புரியாத சில உள்நாட்டு, வெளிநாட்டுப் பிரபல எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி அசர வைத்தேன். அவர்கள் என்னைப் பிரமிப்போடு பார்ப்பதில் உள்ளூர ஒரு சந்தோஷம். ஒருவித மமதை கலந்து ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்த நாட்கள் அவை. கையெழுத்துப் பத்திரிக்கையும், தினசரி பேப்பர்களின் ஞாயிறு பதிப்புகளில் அவ்வப்போது வெளிவரும் கவிதைகளும் கொஞ்சம் தெம்பூட்டிக் கொண்டிருந்தன.

கல்லூரிப் போக விருப்பம் இல்லை என்று சொன்னதும் அப்பா எந்த அதிர்ச்சியும் காட்டவில்லை. ‘’பிறகு?’’ என்றார். சென்னைக்குப் போய் எதாவது பத்திரிக்கை ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்து நிறைய கதை கட்டுரையெல்லாம் எழுதணும் என்று நான் சொன்னதும் எதிர்ப்பு சொல்லாமல் ஆமோதித்தார். அம்மாதான் பலத்த எதிர்ப்பைக் காட்டினாள். ‘’ஆசைப்படறான். போயிட்டுதான் வரட்டுமே, என்ன ஆகிடப்போகுது? நாளைக்கு உன் புள்ள ஒரு எழுத்தாளனா, பத்திரிக்கை ஆசிரியனா வந்து பிரபலமான உனக்குத்தானே பெருமை?’’என்று அம்மாவை சரிக்கட்டினார். ரயிலுக்கும் ரூம் எடுத்துத் தங்கவும், இரண்டு மாத செலவுக்கும் என்று ஒரு கணிசமான பணமும் அனுப்பிய அப்பா வேறு யாருக்குமே அமைந்திருக்க மாட்டார்கள்.

தினசரிகளில் வெளிவந்திருந்த ஒரு சில கவிதைகள்தான் அப்போதைக்கு எனக்கு சகலவிதமான சர்டிபிகேட்டுகள்! அங்கேயிங்கே அல்லாடி கடைசியில் நடையாய் நடந்த காரணத்துக்காக ‘கணையாழி’ என்ற ஒரு சிறுபத்திரிக்கையில் பரிதாபப்பட்டு எனக்கு வேலை போட்டுக் கொடுத்தார்கள். வந்திருக்கிற கதைகளையெல்லாம் படித்து அதன் கதைச்சுருக்கத்தை ஒரு சின்ன பேப்பரில் எழுதி அதை டெல்லியில் எதோ ஒரு ஆங்கிலப்பத்திரிக்கையில் பெரிய பொறுப்பிலிருந்த கணையாழியின் ஆசிரியருக்கு தபாலில் அனுப்ப வேண்டும். அவர் அதிலிருந்து சில கதைகளை அந்த மாத இதழுக்குத் தேர்வு செய்து அனுப்பி வைப்பார். மொத்த வேலையும் ஒரு வாரத்தில் முடிந்து விடும். ஒருசில நேரங்களில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறைதான் புத்தகம் வெளிவரும்!

ஒருமுறை டெல்லியிலிருந்து வந்திருந்த ஆசிரியரிடம் நான் எழுதிய ஒரு சிறுகதையைத் தயங்கியபடியே நீட்டினேன். வாங்கியவர் உடனே படித்துப் பார்த்துவிட்டு ‘’ நல்லாதானிருக்கு, இந்தமாத சிறுகதைகள்ல சேத்துக்கப்பா...’’ என்று கொடுத்துவிட்டுப் போய்விட்டார். எனக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்துவிட்டதாக உணர்ந்தேன். உடனே அப்பாவுக்குத்தான் அந்தச் சந்தோஷத்தைத் தெரிவித்தேன். பிறகு கதை வந்த கணையாழி அங்கே கிடைக்கவில்லை என்பதால் அவர் கேட்டிருந்தபடி தபாலில் அனுப்பி வைத்தேன். படித்துவிட்டு அவர் கருத்தையும் அடுத்த கார்டில் தெரிவித்திருந்தார். அதோடு பின்குறிப்பாக ‘உன் கதையை அம்மாவுக்கும் படித்துக் காண்பித்தேன். அவளுக்கும் பிடித்திருந்தது’ என்று எழுதியிருந்தார். அந்தக் காட்சியை நான் மனசில் கொண்டுவந்து பார்த்தேன். சுகமாக இருந்தது.

பத்துவருடப் போராட்டத்திற்குப் பிறகு பிரபல வாரப் பத்திரிக்கை ஒன்றில் சினிமா பகுதி ஆசிரியராக உயர்ந்த நிலை. நல்ல சம்பளம். கல்யாணம், குழந்தைகள், ஆபீஸ் பிஸி என்று ஓடிக் கொண்டிருந்தேன். பத்திரிக்கையில் சினிமா பொறுப்பு என்பதால் எல்லா திரை நட்சத்திரங்கள், இயக்குனர்களின் நேரடித் தொடர்பும் நல்ல மதிப்பும் எனக்குக் கிடைத்திருந்தது. அப்பாவையும் அம்மாவையும் இங்கே கூட்டிக் கொண்டுவந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பது ஆசை. எத்தனையோமுறை கேட்டுப் பார்த்தும் அப்பா அசைந்து கொடுக்கவில்லை. மூன்று மாதத்திற்கு ஒருமுறை சென்னைக்கு வருவார்கள்; ஒருவாரம் இருப்பார்கள். கிளம்பிவிடுவார்கள். ஆனாலும் அவர்கள் அருகில் இல்லாத குறையை அப்பாவின் கடிதங்கள் பூரணமாகத் தீர்த்துவிடும். நேரடி ஒளிபரப்பு போல அவரது கடிதங்கள் குடும்பம் மற்றும் ஊர் செய்திகளை தெரியப்படுத்திவிடும்.

இதனிடையே கடைசி தங்கையின் திருமண ஏற்பாடுகள் நடந்தன. திருமண வரவேற்பை சென்னையில் வைத்துக் கொள்ளலாமே என்று அப்பாவிடம் கேட்டிருந்தேன். முதலில் ‘எதற்கு உனக்குச் சிரமம்?’ என்று மறுத்தவர் பின்னர் ஒருவழியாகச் சம்மதித்தார். ஆறு குழந்தைகளுக்கும் சிறப்பாக திருமணம் நடத்தியவருக்கும் ஏழாவதாக அந்தச் சிரமத்தில் நானும் கொஞ்சம் பங்கு கொள்ளலாமே என்றுதான் வரவேற்புக்கு ஏற்பாடு செய்தேன்.

இங்கே ஒரு மூன்று நட்சத்திர ஓட்டலில் தங்கையின் திருமண வரவேற்பு சிறப்பாக நடந்தது. சுமார் அறுபது எழுபது நடிக நடிகைகள், டைரக்டர்கள், காமிராமேன்கள், இசையமைப்பாளர்கள் என்று முக்கிய புள்ளிகள் அனைவருமே நேரில் வந்து நிஜமான நட்பை கெளரவப்படுத்தியிருந்தார்கள். சக ஊழியர்கள், மற்ற பத்திரிக்கை நண்பர்கள் என்று நான் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே ரிசப்சன் களை கட்டியிருந்தது.

ஊரிலிருந்து வந்திருந்தவர்களும் தங்கை கணவருக்கும் ரொம்ப சந்தோஷம். தன் அபிமான நட்சத்திரங்களெல்லாம் அண்ணனோடு இவ்வளவு நெருக்கமாக பேசிக் கொண்டிருக்கிறார்களே என்று தங்கைக்கும் ஏக மகிழ்ச்சி. எல்லாம் சிறப்பாக முடிந்து ஊருக்குக் கிளம்புகிறபோதுகூட அப்பா எதுவும் சொல்லவில்லை. நான்கூட அவருக்கு இந்த ஆடம்பரமெல்லாம் பிடிக்காமல் இருந்திருக்கும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் ஊருக்குப் போனதும் மனசு நெகிழ்ந்துபோய் மூன்று கார்டுகளில் அப்பா எழுதியிருந்த விஷயம்தான் எனக்குக் கிடைத்த ஜனாதிபதி விருது!

‘தனி ஆளாய் சென்னைக்குப் போய் நீ கஷ்டப்பட்ட போதெல்லாம் ஒருபக்கம் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறேன். உன்னை மேல படிக்க வச்சு ஒரு ந் அல்ல உத்தியோகம் வாங்கிக் கொடுக்காம இப்படி அநாதை மாதிரி ஐநூறு மைலுக்கப்பால் அனுப்பி வைச்சிருக்கேனே நான் ஒரு நல்ல தகப்பனாயில்லையோன்னு பல நாள் தூக்கமில்லாம தவிச்சிருக்கேன். ஆனா நீ உன் சொந்த முயற்சியில இவ்வளவு தூரம் முன்னேறி , ஒரு நல்ல வேலையையும் நீயா தேடிக்கிட்டதுகூட எனக்குப் பெருசா படல. அதுக்கும்மேல, நீ கூப்பிடேங்கற காரணத்துக்காக இருநூறு ஜனம், பட்டணத்துல அவங்க பரபரப்பான வேலைக்கு நடுவுல உனக்காக நேர்ல வந்திருந்து மனசு ஒப்பி சந்தோஷத்தைப் பகிர்ந்திட்டு கைகுலுக்கி வாழ்த்திட்டுப் போனதைப் பார்த்தப்பதான் என் மனசே நிறைவாச்சு. நீ காசு பணம் சேர்த்து வைக்கலியேன்னு நான் உன்னைக் குறை சொல்லமாட்டேன். மனுஷங்களை சேர்த்து வெச்சிருக்கியே அது போதும். ஆண்டவன் காப்பாத்துறானோ இல்லையோ, அந்த அன்பு உன்னக் காப்பாத்தும்..’

படித்ததும் அழுதேவிட்டேன். எவ்வளவு துல்லியமாகக் கவனித்து எழுதியிருக்கிறார்! அதுதான் அவரிடமிருந்து வந்த கடைசி கடிதமும்கூட. அதன்பிறகு பக்கவாதாம் வந்து ஆஸ்பத்திரியில் சேர்ந்திருப்பதாகத் தந்திதான் வந்தது. குடும்பத்தோடு அவசர கதியில் ரயில் பிடித்து ஊர் போய்ச் சேர்ந்தபிறகு எனக்காகவே காத்திருந்த மாதிரி என்னை அருகில் அழைத்து ‘லெட்டர் கிடைச்சுதா?’ என்று ஜாடையிலேயே கேட்டார். அதன்பிறகு மூன்று நாள் அவஸ்தைக்குப் பிறகு அடங்கிப் போனார்.

காரியமெல்லாம் முடிந்து மறுபடி சென்னைக்கு வந்தபிறகு பல மாதங்களுக்கு அப்பாவின் இழப்பு மிகப்பெரிய சுமையாக மனசுக்குள் இருந்துக் கொண்டேயிருந்தது. அவரிடமிருந்து இனி கடிதம் வராது என்பதும் மிகப்பெரிய வேதனையாக இருந்தது. இதே யோசனையில் இருந்தபோதுதான் ஒருநாள், அப்பாவிடமிருந்துதானே இனி கடிதம் வராது; நான் அவருக்கு எழுதலாமே என்று தோன்றியது. அன்றிலிருந்து அவர் உயிரோடு இருந்தால் என்னென்ன எழுதுவேனோ அதை அப்படியே வாரந்தோறும் அவருக்கு ஒரு கடிதமாக எழுதிவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டேன். கடைசித் தங்கைக்கு ஆண் குழந்தை பிறந்தது; அதற்கு முத்திருளாண்டி என்று அவரின் பெயரையே வைத்தது; சமீபத்தில் வீட்டுக்கென்று கம்ப்யூட்டர் வாங்கியது; என் மகன் மூன்றிலிருந்து நான்காம் வகுப்புக்குப் போகவிருப்பது...இப்படிப் பல விஷயங்களை அவரிடம் கடிதம் மூலம் தெரியப்படுத்தியதில் ஒரு நிறைவு.

இங்கேதான் நவீன விஞ்ஞான வளர்ச்சி எனக்கு மிகவும் உதவியது. ஆபீஸில் ஒன்றும் வீட்டில் ஒன்றுமாக டிவியை ஓரங்கட்டிக் கொண்டு இருக்கும் கம்ப்யூட்டர் – அதன் மூலம் இண்டர்நெட் – இமெயில் – தமிழ்வழி தகவல் பரிமாற்றங்கள் என்கிற அசுர வளர்ச்சி அப்பாவுக்கும் இ-மெயில் அனுப்ப உதவுகிறது. இ-மெயிலில் அனுப்புகிற தகவல்கள் வான்வெளி வழியாகத்தான் பயணிக்கின்றன. மேலே எங்கேயோ இருக்கிற அப்பாவுக்கு நான் அனுப்புகிற இ-மெயில் நிச்சயம் சென்று சேரும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது பைத்தியக்காரத்தனமாக இருக்கலாம். ஆனால் அப்பாவுக்காக நான் உருவாக்கியிருக்கிற – இ-மெயில் விலாசத்திற்கு நீங்களும்கூட ஒரு மெயில் அனுப்பி வைக்கலாம் – எனது நண்பராகவோ அவரது நண்பராகவோ நீங்கள் இருக்கும் பட்சத்தில்! அப்பா நிஜமாகவே சந்தோஷப்படுவார்.

அப்பாவின் இ-மெயில் விலாசம் இதோ...

muthirulandi@anbu.paasam.com


--------------------

37 comments:

SurveySan said...

:) good one.

Iyappan Krishnan said...

excellent. I think I read this story in av.

did you publish any book so far ?

சாந்தி நேசக்கரம் said...

அப்பாவுக்கு ஈமெயில் இதயத்தைக் கனக்க வைத்துவிட்டது. அப்பாவின் அன்பு கடிதங்கள் பிரிவு என கதையின் அகலம் என் தந்தையை என் முன் கொண்டு வந்தது போன்ற உணர்வு. சிலமாதங்கள் முன்னர் காலமான எனது தந்தையாரின் இழப்பிலிருந்து இன்னும் விடுபடாத எனது துயரோடு உங்கள் கதையும் மனசைக்கனக்க வைத்தள்ளது கல்யாண்.

வாழ்த்துக்கள்.

சாந்தி

நட்புடன் ஜமால் said...

நெகிழ்வாய் இருந்தது.

நட்புடன் ஜமால் said...

தந்தை என்பவர் கற்று கொடுப்பவர்.

ஆசான்.

ஆசானே உங்கள் நேசன் ஆன பிறகு நீங்கள் வெற்றி நடை போடுவது மிக எளிது.

வாழ்த்துக்கள். நல்ல எழுத்து.

N Suresh said...

என் மீது அதீத பாசம் வைத்துள்ள கல்யாண்ஜீ,

என்னை சந்தித்தது கூட இல்லை. இருப்பினும் என் மீது இந்த கல்யாண்ஜீ இத்தனை பாசமா என்ற எனது பலமாத கேள்விக்கு இன்று இந்த சிறுகதை பதில் சொல்லிற்று. அன்பும் பாசமும் நிறைந்த ஒருவரின் மகன் நீங்கள்!

இப்போது அலுவலகத்தில் இருந்து தான் இந்த கதையை வாசித்தேன். பாலுமகேந்திராவின் பாராட்டோ, இந்த கதை ஆனந்தவிகடனில் வெளிவந்ததோ என்னை அப்படியொன்றும் பெரிதாக கவரவில்லை என்பதே உண்மை.

ஆனால் இந்த கதை, உண்மை அழகானது என்று நிரூபித்துள்ளதே, அது என்னை ஈர்த்தது.

அலுவலகத்தில் இருப்பதை சில நொடிகள் மறந்து விட்டேன். ஏறத்தாழ இந்த கதை முழுக்க அழுது கொண்டே வாசித்தேன்.

என் தந்தையின் நினைவிற்கு இந்த கதை கொண்டு சென்றது. என் தந்தைக்கு எழுதப் படிக்க தெரியாது. தொலைபேசியில் பேசி வந்தார், உங்கள் தந்தை கடிதமிட்டார்.

இங்கே நாம் நண்பர்களாக/சகோதரர்களாக இருப்பதைக் கண்டு வானத்திலிருந்து நமது அப்பாக்கள் மகிழட்டும்.

சந்தோஷமோ கவலையோ அல்லது இரண்டு கலர்ந்த என்னமோ - சொல்ல முடியாத ஓர் உணர்வில்

உங்களன்பு சகோதரன்
என் சுரேஷ்

goma said...

கடிதம் எழுதுவதை என் ஆரோக்கியமான ஹாபியாகக் கொண்டிருந்த காலத்துக்கு என்னை அழைத்துச் சென்று விட்டது உங்கள் சிறுகதை.ஆழமான கருத்தை அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்.கடிதத்தை நேசித்த உங்கள் தந்தையாருக்கு என் அஞ்சலி.
ஆயிரம் மைலுக்கு அப்பால் உள்ளவரையும் அருகே நிறுத்திவைக்கும் அற்புதமான ஒரு மந்திரக் கோல் இந்த கடிதக்கலை.இன்று அது 10 விழுக்காடுக்குள் விழுந்த விட்டது,என்று அறியும் பொழுது வருத்தமாகத்தான் இருக்கிறது.

Anonymous said...

உங்களுக்கு அப்பா, எனக்கு அப்பப்பா....

மயிலாடுதுறை சிவா said...

படித்து முடித்தவுடன் மனம் கனக்கிறது.

இதை ஒரு குறும் படமாக எடுக்கலாம் போல் உள்ளது!

வாழ்த்துக்கள் கல்யாண். நான் பெரிதும் மதிக்கிற உன்னத கலைஞன் பாலுமகேந்திரா உங்களை பாராட்டி இருப்பது மிகப் பெரிய பொக்கிஷம்!

மயிலாடுதுறை சிவா...

லிவிங் ஸ்மைல் said...

ஹே! இந்த கத நான் படிச்சிருக்கேன். நல்ல கதை. நீங்க எழுதினதா.. ரொம்ப சந்தோசம். மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒரு சந்தேகம் இது Fictionஆ, நெஜமா...?

நா. கணேசன் said...

மிகவும் அருமை!

Kavinaya said...

மனதைத் தொட்ட கதை. அருமை. வாழ்த்துகள்.

Tech Shankar said...

அழ வைத்துவிட்டீர்கள்.

இயல்பான உங்க்ள் நடையில் எழுதி உள்ளீர்கள்.

எந்த மெழுகுப் பூச்சும் இல்லாமல், கதை அதன் போக்கில் செல்கிறது.

வாழ்த்துக்கள்.

அனுபவம் பளிச்சிடுகிறது.
//இதுவே ஒரு ஆரம்பக்கட்ட கவிஞனுக்கு மரண அடியாக இருந்தது

துளசி கோபால் said...

அருமை.

நம் மனதுக்கு இனியவர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொள்வது சுகமானதே, அது கற்பனை என்றாலுமே.

வினோத் கெளதம் said...

நல்ல நெகிழ்வான கதை.

geevanathy said...

/////அவர் மரணம்கூட என்னைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. ஆனால் அவரிடமிருந்து இனிமேல் கடிதங்கள் வரவே வராது என்பதுதான் அவரின் இழப்பைவிடக் கொடுமையானதாக இருந்தது.
/////

படித்து முடிந்ததும் கனத்திருந்தது இதயம்

////இது ஒரு யுனிவர்சல் தீம் ///
உண்மை
இயல்பான நடை,அலங்காரமில்லாத வார்த்தைப் பிரயோகங்கள் ..... அருமை வாழ்த்துக்கள்......

RAMASUBRAMANIA SHARMA said...

EXCELLENT ARTICLE...KINDLY ACCEPT MY WISHES...PL CONTINUE WRITING...

Anonymous said...

வாசிக்கும்போது மிக நெகிழ்சியாக இருந்தது

Anonymous said...

அருமையான கதை

Resh said...

I also red this story in Vikadan without knowing you as a author, it's nice. Congrats.

நசரேயன் said...

ரெம்ப அருமையா இருக்கு

boopathy perumal said...

இந்த கதையை படிக்கும் ஒவ்வொரு "மகனும்" தனது மறைந்து விட்ட தந்தையையின் நினைவுகளில் மூழ்காமல் இருக்க முடியாது, இந்த நிகழ்வுகளின் தாக்கம் தந்தையை இழந்தவர்கள் மட்டுமே உணர முடியும். நான் பாலிடெக்னிக் படிக்கும் போது ஒருமுறை விடுதியில் பணம் கட்ட அவரது திருமண மோதிரத்தை 1985 ஆம் ஆண்டு ருபாய் 750 க்கு வங்கியில் அடகு வைத்து பணம் அனுப்பினார், அந்த மோதிரத்தை இப்போது பார்த்தாலும் அந்த நிகழ்வுதான் ஞாபகம் வருகிறது.

Anonymous said...

மிகச் சிறப்பாக எழுதியிருகிறீர்கள்.

வாழ்த்துக்கள்.

☀நான் ஆதவன்☀ said...

கண்களில் நீர் கேர்த்து விட்டது தோழரே வாழ்த்துக்கள்

goma said...

அடே! டெம்ப்பிளேட் மாற்றம் நன்றாக உள்ளது.
பழயன் கழிதலும் புதியன புகுதலும் என்று நமக்காகத்தான் சொன்னார்களோ.நானும் அவ்வப்போது மாற்றுவேன்

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் நெகிழ்ச்சியான கதை. பெரும்பாலும் தந்தை என்ற மனிதனை புரிந்து கொள்ள பிள்ளைகள் - அதிலும் ஆண் பிள்ளைகள் பெரும்காலம் கடக்க வேண்டி இருக்கிறது. அதன் காரணமாக நான் கொள்வது ஆண்களின் ஈகோ எனப்படும் உணர்ச்சிதான். அந்த குமிழ் உடையும் போது அப்பா என்ற மனிதனின் காலம் பெரும்பாலும் முடிந்து விடுகிறது. திரு.பாலுமகேந்திரா அவர்கள் சொன்னது போல இது பன்மொழிகளிலும் மொழி பெயர்க்கபடவேண்டிய ஒரு கதை. ஒரு இனம் தெரியாத நூலிழையில் கட்டப்பட்ட தந்தை மகன் பாசம் மிக இயல்பான வார்த்தைகளில், இயல்பான சம்பவங்களில் சொல்லபட்டு உள்ளது அருமை. மெல்லிய நகைச்சுவை இழையோடும் சுய சோகங்கள் மேலும் உணர்வு கூட்டுகின்றன. மேலும் நிறைய படிக்க ஆசைப்படுகிறோம்... வாழ்த்துக்கள்.

இது என் சங்கப்பலகை said...

வணக்கம். இதே முத்திரை கதை போட்டியில் நானும் கலந்துகொண்டவன் என்கிற முறையில்
அப்போதே இந்த கதையிடம் நான் தோற்றுப்போனதை மனமார ஒப்புக்கொண்டிருக்கிறேன். சக்திவாய்ந்த காலம் இன்று படித்ததையே மீண்டும் படிக்க வைக்க- சுரேஷ் அண்ணா மூலம் என்னை பணித்திருக்கிறது. இது ஒருவகையில் என் கதையும் கூட.படபிடிப்பிலிருந்தபோது அப்பாவுக்கு முடியவில்லை உன் பெயரையே சொல்லிக்கொண்டிருக்கிறார்ர் எனும் சேதி கேட்டு, கிளம்பிப்போய் உயிரற்ற அவரை பார்த்த அதிர்ச்சியும்,சட்ட முறைக்கு உட்பட்ட சில விண்ணப்பங்களில் அப்பா எனுமிடத்தில் 'late'என் எழுதும் ஒவ்வொருமுறையும் அழுபவன் நான்.
எனது திருமணத்தில் அப்பாவுக்கு உடன்பாடில்லை.நேசத்தைவிட்டுத் தர என்னால் இயலவில்லை.பத்திரிக்கை ஏதும் அடிக்காமல் ஒன்றேயொன்றை நானெழுதி அவளை அழைத்தேன். அவள் ஒன்றை எழுதி என்னை அழைத்தாள். புதிய வாழ்வின் தேசம் புகுந்த பிறகு அப்பாவுக்கும் எனக்குமான தொடர்பு அற்றுப்போனது.அவர் மரணகாலத்தில் எடுத்த சில முடிவுகள் அப்பாக்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கான பாடம். இறந்தவரை புதைப்பது எங்கள் வழக்கம். ஆனால் அப்பா..என் மூத்த அண்ணனிடம்.."அவன் காதல் திருமணம் நிமித்தம் தம்பியோடு முரண்பட்டது நிஜம். அதே சமயத்தில் இந்த ஊருக்கு அவன் என் உறவிலிருந்து விலகாத பிள்ளை என்பதை நான் அறிவிக்க வேண்டும்.என்னை புதைப்பதற்கு பதில் எரித்துவிடவும். கொள்ளியை என் கடைசி மகனிடம் கொடுங்கள்.அப்போதுதான் ஊருக்கு என்னுடையதில் எல்லா பாத்தியதையும் அவனுக்குமிருக்கிறது என தெரியும்."என்று அவர் சொன்னபடிதான் அனைத்தும் நடந்தது.
அப்பாவிடமிருந்து மனமுவந்து நான் கேட்டு.வேண்டி பெற்றுக்கொண்டது அவரது தமிழ்.அந்த தமிழ்தான் எனக்கான வாழ்க்கை.
உங்களின் கதை என் அப்பாவை மீண்டும் என்னிடம் சேர்த்திருக்கிறது.எனக்கு மட்டுமல்ல இந்த கதையை படிக்கும் ஒவ்வொருவரும் தம் தந்தையரை எண்ணுவர் என்பதே இதன் வெற்றி.

Chandravathanaa said...

கல்யாண்குமார்,

மிக அருமையான பதிவு.
கண்கள் பொலபொலவென்று கொட்டி விட்டன.

விக்னேஷ்வரி said...

மிகவும் நெகிழ்வாயிருக்கிறது.

சுதாகர் said...

மிகவும் அருமை.
உணர்ச்சிபூர்வமான எழுத்து.
வாழ்த்துக்கள்

Unknown said...

ஊண்மையின் தன்மையில் விளைந்த நெகிழ்வு உங்கள் வார்த்தைகளை படிக்கும் போது. இது கதையாக தோன்றவில்லை. உங்கள் சுய சரிதையின் ஒரு பாகமாக இருக்குமோ என்று தோன்றியது...

Unknown said...

உண்மையின் தன்மையில் தோன்றிய எழுத்துக்கள் நெகிழ வைத்து விட்டன. இது ஒரு சிறுகதையாக தோன்றவில்லை எனக்கு. உங்கள் சுய சரிதையின் ஒரு பாகமாகவே தோன்றியது!

Unknown said...

ரொம்பவே நெகிழ்ச்சியான பதிவு.... கொடுத்து வைத்தவர் நீங்க....எல்லா விஷயத்திலேயும் பக்கபலமா இருக்கிற பெற்றோர் கிடைக்கறது ரொம்பவே குறைவு.....ஒழுங்க கல்லூரிக்கு போயி படிச்சி வேலைய தேடிக்கோன்னு வற்புறுத்தாமல் உங்கள் விருப்பத்துக்கு விட்டு கொடுத்ததை படிச்ச போது உங்கள் மேலே கொஞ்சம் பொறாமை கூட....:)

Mangaldasan Pandian said...

Dear Kalyan Anna...Happen to see your blog and read the short story about Appa. Superb. I was melted. I remember my appa too.
Mangal - Kuwait.

சசிகலா said...

உண்மையில் கண்ணீரோடு எழுதுகிறேன் ப்ரண்ட். அப்பா எனக்கும் என் அம்மாவை விட அப்பாவைத்தான் மிகவும் பிடிக்கும். தங்கள் ஒவ்வொரு வரியும் என் அப்பாவை நினைவுபடுத்த தவறிவில்லை. (மறந்தால் தானே நினைக்க) ஒவ்வொரு குழந்தைக்கும் தங்களைப்போன்ற அவரவர் வளர்ச்சியில் தடை சொல்லாத குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் பெற்றோர் கிடைப்பது வரமே.

Unknown said...

Feeling heavy at heart....tears rolling down on my cheeks...a silent complete expression of love.....continue to do the good job sir

kaarthika said...

அருமை கல்யாண் .
நெகிழ வைத்து விட் டீர்கள்
karthika Rajkumar